"சொந்த ஊரை தாண்ட முடியாது!" அண்ணாமலையை ஓப்பனாக எச்சரித்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்!
கடலூர்: தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்ற அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவலுக்குப் பின்னர் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரத் தொடங்கியது.
இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரத் தொடங்கியது. இதனால் நாட்டிலுள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

மத்திய அரசு
விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் இணைப்புகளைப் பெற்றவர்களுக்கு ரூபாய் 200 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர்.

அண்ணாமலை
இதற்கிடையே திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாயும் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும் என்றும் இது குறித்த அறிவிப்பை அடுத்த 72 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். அப்படிக் குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கு வேளான் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், நகைக் கடன் தள்ளுபடி, நெகிழி பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொடரும் 4 ஆண்டுகளும் மக்களுக்குப் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் தொடரும்" என்றார்.

சொந்த ஊரைத் தாண்ட முடியாது
தொடர்ந்து அண்ணாமலையின் போராட்டம் தொடர்பான பேச்சு குறித்துப் பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், "இது திமுக ஆட்சி. சொன்னதைச் செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. கர்நாடகத்தில் உள்ள அரசுக்கு சல்யூட் அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது.

மதக்கலவரம்
கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைத் தமிழகத்துக்குக் கொடுக்கக் கூடாது எனப் பேசியவர் அண்ணாமலை. இவர் தான் இப்போது தமிழக பாஜக தலைவர். இவர் தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார். மதக்கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறார் அண்ணாமலை. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. எந்தவொரு சவாலுக்கும் பயப்பட மாட்டோம்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications