சிதம்பரம்: வகுப்புக்கு வராமல் டிமிக்கி.. மாணவனை சரமாரியாக அடித்து, காலால் உதைத்த ஆசிரியர்.. வீடியோ
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தனது வகுப்புக்கு ஏன் வரவில்லை எனக்கேட்டு குச்சியால் சரமாரியாக அடித்து மற்றும் காலால் உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் படிக்கும் மாணவர்கள் சஞ்சய், அஜய் குமார், நெக்ஸா பாலன், சுசீந்திரன், சூர்யா, சந்துரு உள்ளிட்டோரை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுப்பிரமணியன் தனது வகுப்புக்கு ஏன் வரவில்லை என கேட்டு ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த கம்பால் மற்றும் காலால் உதைத்துள்ளார்.

பரப்பிவிட்டனர்
இந்த காட்சியை உடன் பயிலும் சக மாணவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இதனையடுத்து தற்பொழுது சமூக வலைதளத்தில் இந்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்த்து பலரும் கோபம் அடைந்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள்
அரசுப்பள்ளியில் மாணவனை ஆசிரியர் கம்பால் மற்றும் காலால் உதைக்கும் காட்சிகள் பெற்றோர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்லை மீறல்
ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக்கூடாது என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவையும் மீறி ஆசிரியர் மாணவரை தாக்கி உள்ளது தெரியவந்துள்ளது. மாணவர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை கண்டு மனம் வெதும்பி இப்படி சில ஆசிரியர்கள் எல்லை மீறுவது அவ்வப்போது நடக்கிறது.

நடவடிக்கை தேவை
முன்பெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதை பெற்றோர்கள் ஊக்குவித்தார்கள். இப்போது அப்படி அல்ல... ஆசிரியர்கள் அடித்தால் சண்டைக்கு வருவதுடன், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படும் சம்பவங்களும் நடக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதற்காக லேசாக அடிக்கலாம் என்று ஒரு தரப்பும், அடிக்கவே கூடாது என்று ஒரு கருத்தும் உள்ளது. எனினும் ஆசிரியர்கள் எல்லை மீறி கொடூரமாக தாக்குவதை ஏற்க முடியாது என பல நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஆசிரியர் தாக்கும் காட்சி மோசமாக உள்ளதாக கூறி பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications