அட அது நிஜ கல்யாணம் இல்லை.. குழந்தை திருமண புகாரில் சிதம்பரம் தீட்சிதர்கள் பரபரப்பு பதில் மனு
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் செய்து கொண்டதாக அடுத்தடுத்து தீட்சிதர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதற்காக தொடரப்பட்ட மனுக்களை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.
கடந்த சில மாதங்களாகவே சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், கணக்கு வழக்கு, தீட்சிதர்கள் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் சமீப வாரங்களாக குழந்தை திருமணம் செய்ததற்காக அடுத்தடுத்து தீட்சிதர்களும் சிறுமியின் பெற்றோர்களும் சிக்கி வருகிறார்கள்.
13 வயசு சிறுமி.. சிக்கிய சிதம்பரம் கோயில் தீட்சிதர் - “தாயும்” உடந்தை! மேலும் ஒரு “குழந்தை” திருமணம்
குழந்தை திருமணம்
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது வழக்கம் என்றும், இவர்கள் அரசின் குழந்தை திருமணத்தை தடை சட்டங்களை பொருட்படுத்துவது கிடையாது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 வயது சிறுமியை நாகரத்தினம் என்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் திருமணம் செய்துள்ளார்.
வழக்குப்பதிவு
சிறுமியின் தாய் ஒப்புதலுடன் நடைபெற்ற இந்த திருமணம் தொடர்பாக கடலூர் ஊர்நல அலுவலர் சித்ரா காவல்நிலையத்தில் புகாரளித்து இருந்தார். அதன் அடிப்படையில், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் மாப்பிள்ளை நாகரத்தினத்தின் அண்ணன் சூர்யா தீட்சிதர் மற்றும் சிறுமியுன் தாய் தங்கம்மாள் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் செய்தனர்.
14 வயது சிறுமி
இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 14 வயது மகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த சோமசேகர தீட்சிதர் என்பவர் திருமணம் செய்து வைத்தார். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து திருமணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறுமியின் தந்தை
இதில் சிறுமியின் தந்தையான சோமசேகர தீட்சிதர் கைது செய்யப்பட்டார். சிறுமியை திருமணம் செய்துவிட்டு தப்பியோடிய பசுபதி தீட்சிதரை வலைவீசி தேடிய போலீசார் பின்னர் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக சிறுமியை திருமணம் செய்துகொண்ட ராஜரத்தின தீட்சிதர் மற்றும் மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேஸ்வர தீட்சிதர் ஆகியோரும் கைதாகி இருக்கிறார்கள்.
பெற்றோர் வழக்கு
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 15 சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்யப்பட்டதாக கடலூர் மகளிர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்திட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர், உறவினர்கள், தீட்சிதர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
உண்மையான திருமணம்
தீட்சிதர் குல வழக்கத்தின்படி நடராஜர் கோயிலில் பல பெற்றோர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி இருப்பதாகவும், ஆனால் அது உண்மையான திருமணம் இல்லை என்றும், தீட்சிதர்கள் மீதான நன்மதிப்பை கெடுக்கும் வகையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் தன்னுடைய மகள் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பள்ளிக்கு செல்வதற்கு கூட மறுப்பு தெரிவித்து வருவதாகவும் பெற்றோர் தங்கள் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்கள்.