19 செ.மீ. மழை.. கடலூரில் அதுவும் பிப்ரவரி மாதம் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதம் மழை பெய்துள்ளது. இதனால் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது.
வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடலூர், விழுப்புரம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி வடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது.
குளிர், மழை
கடலூரில் பிப்ரவரி மாதத்தில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இந்த பிப்ரவரி மாதத்தில் குளிர், மழை என வழக்கத்திற்கு மாறாக இருந்து வருகிறது. இது போன்று விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, கோலியனூர், திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழை
அது போல் புதுவையில் காலாப்பேட்டை, கனககெட்டிக்குளம், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.
பயிர்கள்
கடலூர், புதுவையில் 19 செ.மீ.க்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. ஏற்கெனவே வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தற்போது இந்த மழையால் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயிர்கள் மூழ்கியுள்ளன. சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடுகிறது.
தேடும் பணிகள்
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். புதுவையில் கனமழையால் வெள்ளத்தில் பெண் ஒருவர் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக உள்ளது. புதுவையில் கனமழை காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.