கடனை கொடுக்காத தொழிலாளி.. கூலிப்படையை ஏவிய விசிக பெண் நிர்வாகி! தட்டித்தூக்கிய போலீஸ்- பரபர தகவல்
கடலூர்: கடனை திரும்ப கொடுக்காததால் கூலிப்படையை வைத்து தச்சு தொழிலாளியை கடத்திய வழக்கில் கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஞானமணி (வயது 57). தச்சுத்தொழிலாளி. இவர் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவர் குடும்ப சூழல் காரணமாக கடன் வாங்கி முடிவு செய்தார்.
டிராக்டர் டிரைலர் திருட்டு.. பாஜக மாவட்ட நிர்வாகி காவல் துறையினரால் கைது.. பரபரப்பு!
தச்சுத்தொழிலாளி கடத்தல்
இதையடுத்து ஞானமணி சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சுதாவிடம் கடன் வாங்கினார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி ஒரு கும்பல் கடத்தி சென்றது. ஞானமணியை அடித்து உதைத்த அந்த கும்பல் ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து ஞானமணி ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
2 பேர் அதிரடி கைது
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடத்தலில் ஈடுபட்டதாக கூறி மழவராய நல்லூர் மேட்டு தெரு தமிழ் அழகன் (32), குமாரக்குடி வேல்மணி (29) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
விசிக பெண் நிர்வாகி
அதாவது கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவி ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெரு சுதா (41) என்பவர் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. கடனை திரும்ப கொடுக்காத பிரச்சனையில் இவர் தான் கூலிப்படையை ஏவி ஞானமணியை கடத்தியதும், இதற்கு ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் ரவி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
கைது- 4 பேருக்கு வலைவீச்சு
இதையடுத்து போலீசார் சுதாவை கைது செய்தனர். இந்த வழக்கில் இன்னும் ரவி, கூலிப்படையை சேர்ந்த 3 பேர் தலைமுறைவாக உள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரூ.5 ஆயிரம் பணத்திற்காக கூலிப்படை வைத்து தொழிலாளியை கடத்திய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.