"குழந்தையை தூக்கலாம்னு போனேன்.." கடலூரில் காப்பாற்ற சென்றவரும் மின்சாரம் தாக்கியதில் படுகாயம்! சோகம்
கடலூர்: இன்று காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது வேன் மீது ரயில் மோதியதில் மோசமான விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், சில மாணவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்து நடந்தபோது மாணவர்களைக் காப்பாற்ற வந்த நபரும் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் செம்மங்குப்பம் அருகே இன்று காலை ரயில்வே கேட்டில் ஏற்பட்ட விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, அந்த வேன் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது.

விபத்து
தனியார் பள்ளிக்குச் சொந்தமான அந்த வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் அந்த வேன் மீது மோதியது. இந்த விபத்தில் ஒரு மாணவியும், ஒரு மாணவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மாணவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.
ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதாகவும், அப்போது வேன் தண்டவாளத்தைக் கடந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், கேட்டை திறக்கச் சொன்னது வேன் ஓட்டுநர் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கிடையே விபத்து நடந்ததை நேரில் பார்த்தவர்கள் சில பகீர் கருத்துகளைக் கூறியுள்ளனர்.
மின்சாரம் தாக்கியது
இந்த விபத்து நடந்த ரயில்வே கேட் அருகே வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரது வீடு விபத்து நடந்த இடத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. விபத்து நடந்ததைப் பார்த்தவுடன் உடன் குழந்தைகளுக்கு உதவ அவர் ரயில்வே நிலையத்தை நோக்கி ஓடி வந்திருக்கிறார். அப்போது திடீரென ஒயர் அறுந்து அண்ணாதுரை மீது விழுந்துள்ளது. அதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கிவீசப்பட்டார்.
இதில் படுகாயமடைந்த அவர், இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பசிய அண்ணாதுரை, "காலை 7 மணியளவில் நான் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். அப்போது பலத்த சத்தம் கேட்டது. அது கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழக்கமான ரயில் தான். திடீரென ஏன் சத்தம் கேட்கிறது என பார்த்தால் கொஞ்ச தூரத்தில் மஞ்சள் கலர் வேன் மீது ரயில் மோதியிருந்தது.
தூக்கி வீசப்பட்டது
எனது வீட்டில் இருந்து ரயில்வே கேட் சுமார் 100 மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால் ரயில் மோதியதில் இரு மாணவர்களின் உடல்கள் எனது வீட்டிற்கு அருகே வந்து விழுந்தது. சரி பிள்ளைகளைக் காப்பாற்றப் போகலாம் என்று ஓடிச் சென்றேன். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஒயர் என் மீது விழுந்தது. அந்த ஒயர் காலில் பட்டதில் கரண்ட் ஷாக் அடித்து, நான் தூக்கி எறியப்பட்டேன்.
ஆனால், அங்கிருந்து பார்த்த போது ரயில் கேட் திறந்தே இருந்தது தெளிவாகத் தெரிந்தது. வழக்கமாக ரயில் செல்லும்போது கேட்டை மூடியே வைப்பார்கள். ஆனால், இந்த முறை அது திறந்தே இருந்தது" என்று அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications