விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியே இல்லை.. அது ஒரு மாவட்ட கட்சி! பாஜக எச். ராஜா கடும் விமர்சனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில கட்சி கூட கிடையாது, அது மாவட்ட கட்சி என எச் ராஜா விமர்சனம்
சிதம்பரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில கட்சி கூட கிடையாது, அது மாவட்ட கட்சி என பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா விமர்சித்துள்ளார்.
புவனகிரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பாஜகவின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா சந்தித்தார்.
அப்போது அவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியிருந்தார். எச் ராஜா மேலும் பேசுகையில் இந்த நாடாளுமன்றத் தொகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பாஜகவினரை ஓட ஓட விரட்டுவாராம்.

விடுதலைச் சிறுத்தைகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில கட்சி கூட இல்லை. அது ஒரு மாவட்ட கட்சி. இந்த மாவட்டத்திற்கு வெளியே பெரிதாக ஒன்றும் நிர்வாகிகள் அந்த கட்சிக்கு இல்லை. எங்கள் ஊர் காரைக்குடியில் நகரத் தலைவரே கிடையாது. ஊர் குருவி எவ்வளவு உயர பறந்தாலும் அது பருந்தாக முடியாது. அவர் பாஜகவிற்கு எதிராக விஷத்தை கக்க காரணம் என்ன?

பட்டியலின சமுதாயம்
இன்று பட்டியலின சமுதாயத்திலிருந்து அலை அலையாக பாஜகவுக்கு வருகிறார்கள். அதனால் தனது கூடாரம் காலி ஆகிறது. பட்டியல் சமுதாயத்தின் சதவீதத்தை வைத்து இவர் பேரம் செய்து வருகிறார். அதனால் திருமாவளவனை எச்சரிக்க விரும்புகிறேன். நீங்கள் சொன்னபடி வெட்கம், சூடு, சொரணை இருந்தால் 24 மணி நேரத்தில் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

முக்கிய பிரச்சினை
தமிழகத்தில் இன்று உள்ள மிக முக்கிய பிரச்சினை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினைதான். இவர்கள் இல்லை என்று சொன்னால் தமிழ்நாடு பொருளாதாரத்தில் சரிந்து விடும் என முதல்வர் ஸ்டாலினே சொல்லியிருக்கிறார். எல்லோரும் பத்திரமாக இருப்பதாக கூறுகிறார்கள். சாராய கடைகளை திறந்து விட்டு தமிழர்களை குடிகாரர் ஆக்கியது திமுகதான். எங்கள் மாநிலத் தலைவரை தொட்டால் தமிழகம் தாங்காது. இதை நான் எச்சரிக்கையாக சொல்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் என்னவெல்லாம் பரிசு பொருட்களை கொடுத்தார்கள்.

வேலை கிடைக்கவில்லை
தமிழர்கள் டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றி வருகிறார்கள். அதனால் தமிழகத்தில் வேலை கிடைக்கவில்லை என்ற அர்த்தம் இல்லை. தமிழர்கள் வேலை பார்ப்பதில்லை. தமிழர்களை எதற்கு லாயக்கிமல்லாமல் செய்தது இந்த டாஸ்மாக் கடைகள்தான். இவ்வாறு எச் ராஜா தெரிவித்துள்ளார். எச் ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications