அமைச்சர் பொன்முடியின் டூவீலர் ஷோரூமில் இரு லாக்கர்களை தூக்கிச் சென்ற மர்மநபர்கள்.. என்ன திருட்டு?
கடலூர்: அமைச்சர் பொன்முடியின் மனைவியின் பெயரில் இயங்கி வரும் இரு சக்கர வாகன ஷோரூமில் லாக்கரை உடைத்து ரூ 3 லட்சம் பணம், 6 கிராம் தங்க நாணயங்கள் திருடப்பட்டன.
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அமைச்சர் பொன்முடியின் மனைவியின் பெயரில் ஒரு இருசக்கர வாகன ஷோரூம் இயங்கி வருகிறது. இந்த கடையில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு ஷோரூமை ஊழியர்கள் பூட்டிச் சென்றுவிட்டு இன்று காலையில் திறப்பதற்காக வந்தனர்.
அப்போது உள்ளே சென்று பார்த்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பீரோ இருக்கும் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த இரு லாக்கர்களை காணவில்லை.
அந்த லாக்கரில் ரூ 3 லட்சம் ரொக்கமும் வாடிக்கையாளர்களுக்கு வைத்திருந்த 6 கிராம் தங்க நாணயமும் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அங்கு ஏதேனும் தடயங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications