பத்தோடு பதினொன்றாக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? ஸ்டாலின்-ஜோ பைடன் சந்திப்பு பற்றி வேல்முருகன்
கடலூர்: இந்தியாவில் வேறு எந்த மாநில முதலமைச்சருக்கும் கிடைக்காத பெருமையாக அமெரிக்க அதிபரை சந்திக்கும் வாய்ப்பு தமிழக முதலமைச்சருக்கு கிடைத்திருக்கிறது என தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பத்தோடு பதினொன்றாக டெல்லிக்கு சென்று கும்பிடு போட்டிருந்தால் இந்த மரியாதை கிடைத்திருக்காது என்றும் தனித்துவமான ஆட்சி நிர்வாகத்துக்கும், சமூக நீதி செயல்பாட்டுக்கும் கிடைத்த பெருமை தான் இந்த நிகழ்வு என வேல்முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடலூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல மண விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார். மத்திய அமைச்சரே தொலைபேசி மூலம் நேரடியாக விடுத்த அழைப்பின் பேரில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றார் என்றும் தமிழகத்தின் முதல்வர் இவர் தான் என்று அமெரிக்க அதிபருக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் என்றால் அதற்கு சுயமரியாதையே காரணம் எனக் கூறினார்.
அதேபோல் சனாதனம் குறித்த பேச்சிலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்வாங்காமல் துணிச்சலாக அதை எதிர்கொண்டதை பாராட்டிய வேல்முருகன், தமிழ்நாட்டின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார் எனக் கூறினார். அண்மைக்காலமாக திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்பட்ட வேல்முருகன், இன்றைய தினம் அது எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசினார்.
வேல்முருகனின் பேச்சை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி, சிவசங்கர் ஆகியோர் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். இதனிடையே திமுக நிர்வாகி இல்ல மண விழாவுக்கு வந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் சரியாக பேசிக்கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications