சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை! தேவாரம் - திருவாசகம் பாடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர்!
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி நின்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடினர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு கால பூஜையின் போதும் கனகசபையில் 30 நிமிடங்கள் தேவாரம் திருவாசகம் பாடிட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
கோவில் நிர்வாகத்திடம் முன் கூட்டியே தகவல் தெரிவித்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவாரம் திருவாசகம் ஓதிக்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனுமதி வழங்கியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில்..இரண்டு நாட்கள் மக்கள் கருத்து கேட்கும் இந்து சமய அறநிலையத்துறை
மக்கள் அதிகாரம்
மக்கள் அதிகாரம் அமைப்பினர், தெய்வத்தமிழ் பேரவை, முத்தமிழ் பேரவை, சைவத்தமிழ் பேரவை, உள்ளிட்ட இன்னும் சில அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி வழங்குமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவை பரிசீலித்த அவர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு கால பூஜையின் போதும் கனகசபையில் 30 நிமிடங்கள் தேவாரம் திருவாசகம் பாடிட அனுமதி வழங்கினார்.
காலை 11 மணியளவில்
மேலும், நடராஜர் சன்னதி முன்பு ஓதி வழிபடலாம் என்றும் இதற்கு கோவில் நிர்வாகம் மறுப்பு ஏதும் தெரிவிக்கக் கூடாது எனவும் தனது அனுமதி கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரன். இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கனகசபை மீது ஏறி நின்று தேவாரம், திருவாசம் பாடி நடராஜரை வழிபட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதனிடையே சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ், கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஹரிதாஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தனர். கனகசபையில் ஏறுவதற்கு முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை சந்தித்த மக்கள் அதிகாரம் அமைப்பினர், இந்து சமய அறநிலையத்துறை அனுமதி படி தேவாரம், திருவாசகம் பாடப்போகிறோம் என்ற கடிதத்தை கொடுத்துவிட்டு விறுவிறுவென நடையை கட்டினர்.
கடந்த மாதம்
கடந்த மாதம் முழுவதும் கனகசபை விவகாரம் தான் விவாதப் பொருளாகவும், பேசு பொருளாகவும் இருந்தது. இதனிடையே இன்றைய தினம் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்திருப்பது கவனிக்கத்தக்கது.