அந்த ஒரு மசோதாவை தோற்கடிச்சா போதும்.. 2024-ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது: கெஜ்ரிவால் நம்பிக்கை
டெல்லி: டெல்லி அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான மத்திய பாஜக அரசின் மசோதாவை ராஜ்யசபாவில் தோற்கடித்துவிட்டாலே போதும்; 2024 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுத்துவிட முடியும் என்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் யாருக்கு என்பதில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிமுக்கியமான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதலுக்கு அதிகாரம் உண்டு; ஆளுநர் என்பவர் மாநில அரசின் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டுவர் என்பதுதான் அந்த தீர்ப்பு. மத்திய பாஜக அரசுக்கு இத்தீர்ப்பு மிகப் பெரும் பினனடைவு- சம்மட்டி அடி.

இதனால் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் டெல்லி அதிகாரிகள் நியமன, மாறுதல் தொடர்பாக மத்திய அரசுக்குதான் அதிகாரம் இருப்பதாக ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் தந்துவிட்டார். இப்படி ஒரு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டால் இதற்கு மாற்றாக முறையாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில் லோக்சபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருக்கிறது. ஆனால் ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு போராடும் நிலையில் உள்ளது பாஜக. ராஜ்யசபாவில் சில எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதாவை நிறைவேற்றிவிட முடியும் என்பது பாஜகவின் கணக்கு. டெல்லி முதல்வரான ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோ, ராஜ்யசபாவில் எப்படியாவது இந்த மசோதாவை தோற்கடித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்.
ராஜ்யசபாவில் மத்திய பாஜக அரசின் டெல்லி சேவைகள் தொடர்பான இம்மசோதாவை தோற்கடிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என அனைத்து பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் உதவியை கேட்டு வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் இணைந்து ஒவ்வொரு மாநிலமாக பயணம் மேற்கொண்டு வருகிறார் கெஜ்ரிவால்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வ மமதா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் கேசிஆர் என ஒவ்வொரு மாநிலமாக இந்த பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் சந்தித்து ஆதரவு கேட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலின் பயணத்தால் மொத்தம் 10 எதிர்க்கட்சிகளின் ஆதரவை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லி சேவைகள் தொடர்பான மசோதா மட்டும் ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்பட்டுவிட்டால் போதும்; 2024-ம் ஆண்டு நிச்சயம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications