ஒரு பக்கம் கொரோனா.. இப்ப இது வேறயா.. பறவை காய்ச்சலுக்கு டெல்லியில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
டெல்லி: பறவைக் காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பறவை காய்ச்சலும் மக்களை போட்டு பாடாய்படுத்தியது.
கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. ஏவியன் இன்ஃப்ளூயன்சா (Avian Influenza) எனும் பறவை காய்ச்சல் காரணமாக மேற்கண்ட மாநிலங்களில் பறவைகள், வாத்துகள், காகங்கள் உயிரிழந்தன.
இதனால் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. நாடு முழுவதும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பறவை காய்ச்சல் ஓரளவு கட்டுக்குள் உள்ளது.
இந்த நிலையில்தான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்11 வயது சிறுவன் பறவை காய்ச்சலுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தியாவில் இந்த ஆண்டு பறவை காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும். அந்த சிறுவனுடன் தொடர்பில் உள்ள அனைத்து ஊழியர்களும் தனிமையில் உள்ளனர் என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறினார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பறவை காய்ச்சல் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் ஒப்பிட்டளவில் குறைவாக இருப்பதாக மும்பை கால்நடை மருத்துவக் கல்லூரி டாக்டர் ஏ.எஸ்.ரனாடே ஜனவரி மாதம் தெரிவித்து இருந்தார். 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் சென்றால் வைரஸ் உடனடியாக இறந்துவிடும்.
சூப்பர்.. தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா..இந்த 7 மாவட்டங்களில் மட்டும் சதமடிக்கும் பாதிப்பு
தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் இறைச்சி மற்றும் முட்டை இரண்டும் நன்கு சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன, இது 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெளிப்படுவதைக் காண முடிகிறது. இதனால் மனிதர்கள் கோழி மற்றும் முட்டைகளை சாப்பிடுவதால் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதானவை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.