சர்க்கரை நோய் டூ சளி தொற்று.. இந்த மாத்திரை மட்டும் வாங்காதீங்க.. 145 மருந்து தரமில்லை: மத்திய அரசு
டெல்லி: சளித்தொற்று, கிருமித்தொற்று, சர்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 145 மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்திருக்கிறது.
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, நோயாளிகள் உபயோகப்படுத்தும் மருந்து, மாத்திரைகள் அனைத்து பரிசோதனைகளுக்கு பிறகே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. இத்தகையை பரிசோதனைகளை, CDSCO (Central Drugs Standards Control Organisation) என்ற மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்புதான் மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு மேற்கொள்ளும் அனைத்துவிதமான சோதனைகளுக்கு பிறகே, மருந்து, மாத்திரைகள் விற்பனைக்கு வரும்.. ஒருவேளை, தரம்குறைவாக இருப்பது தெரிந்தால், அந்த மருந்தின் விற்பனை உடனடியாக தடை விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும்.
மருந்து மாத்திரைகள் மீண்டும் ஆய்வு
அந்தவகையில ஏற்கனவே 156 வகையான ஃஎப்டிஎஸ் (FDS or Fixed Dose Combination) வகையை சேர்ந்த மாத்திரைகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் ஒரு பகீர் வெளியாகியிருந்தது.
சந்தேகத்திற்குரிய மாத்திரை, மருந்துகளை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்தபோது, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், வைட்டமின் குறைபாடு, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உபாதைகளுக்கு எடுத்துக்கொள்ளும் பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் தரமானதாக இல்லை என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சர்க்கரை நோய், சளித்தொற்று
இந்நிலையில், சர்க்கரை நோய், சளி மற்றும் கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக உட்கொள்ளப்படும் 145 மருந்துகள் தரமற்றதாக இருந்ததை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது..
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சளித்தொற்று, கிருமித்தொற்று, சர்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
மருந்து கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு
இந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாகும்.. எனவே, அதுகுறித்த விவரங்களையும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த விவரங்களை அறிந்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு முறை ஆய்வின்போதும், சர்க்கரை நோய், சளித்தொற்று என மக்களை பெரும்பாலும் பாதிக்கக்கூடிய நோய்களுக்கான மருந்துகளே தரமற்றவையாக கண்டறியப்பட்டு வருவது, பொதுமக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் உண்டு பண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications