இந்தியாவிலேயே "வாரிசுகளை" அதிகமாக களமிறக்கி லோக்சபாவுக்குள் அனுப்பிய கட்சி பாஜக! வெளியான டேட்டா
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலில் மிக அதிகமான எண்ணிக்கையில் அரசியல் வாரிசுகளை வேட்பாளர்களை களமிறக்கி எம்பிக்களாக வெற்றி பெற வைத்த கட்சிகள் விவரங்களை "Prajatantra" என்ற தன்னார்வ அமைப்பு பகிரங்கப்படுத்தி உள்ளது. "Political Entry: Analysis of 18th Lok Sabha" என்ற தலைப்பில் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
18-வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் பின்னணி குறித்த ஆய்வு அறிக்கையை "Prajatantra" என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், எம்பிக்களின் பின்னணியை 11 வகையாக பிரித்திருக்கிறது இந்த அமைப்பு.

இதில் குடும்ப அரசியல்/ வாரிசு அரசியல் கேட்டகிரியில்தான் அதிகமான எம்பிக்கள் லோக்சபாவில் கால் பதித்துள்ளனர். வாரிசு என்ற ஒரே காரணத்தால் எம்பியானவர்கள் எண்ணிக்கை 31.7%. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து எம்பியானவர்கள் எண்ணிக்கை 6.6% மாணவர் அரசியலில் ஈடுபட்டு எம்பியானவர்கள் எண்ணிக்கை 9.2%.
லோக்சபா தேர்தலில் பாஜக 110 வாரிசுகளை வேட்பாளர்களாக அறிவித்தது. இவர்களில் 62 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி மொத்தம் 99 வாரிசுகளை வேட்பாளர்களாக களம் இறக்கியது. இவர்களில் 43 பேர் வெற்றி பெற்று எம்பியாகி உள்ளனர். சமாஜ்வதி கட்சி 37 வேட்பாளர்களை நிறுத்தியது; இவர்களில் 15 பேர் எம்பியானார்கள். திரிணாமுல் காங்கிரஸ் 29 வேட்பாளர்களை களமிறக்கியது; இவர்களில் 4 பேர் எம்பியாக வென்றனர்; திமுக மொத்தம் 22 வாரிசுகளை வேட்பாளர்களாக களமிறக்க 7 பேர் எம்பிக்களாக லோக்சபாவில் அமர்ந்துள்ளனர்.
லோக் ஜனசக்தி கட்சியானது 5 வாரிசு வேட்பாளர்களை நிறுத்தியது; இவர்களில் 4 பேர் வெற்றி பெற்றனர். தெலுங்குதேசம் கட்சி 16 வாரிசுகளை நிறுத்த 6 பேர் எம்பியாக வென்றனர்.
18-வது லோக்சபா எம்பிக்களில் மொத்தம் 31.7% பேர் வாரிசுகள். இவர்களில் முதல் தலைமுறை வாரிசுகள் 20.9%; 2-வது தலைமுறை வாரிசுகள் 72.1%; பல தலைமுறை வாரிசுகள் 6.4%.

18-வது லோக்சபா தேர்தலில் மொத்தம் 797 பெண்கள் வேட்பாளர்களாக களம் கண்டனர். இவர்களில் 74 பேர் மட்டுமே எம்பியாக வெற்றி பெற்றனர். இவர்களிலும் 63.5% பேர் வாரிசு அரசியல் பின்புலம் கொண்டவர்கல்தான். உள்ளூர் அரசியலில் இருந்து 14.9%; பிரபலங்கள் என்ற அடிப்படையில் 8.1% பெண்கள் எம்பிக்களாக வென்றுள்ளனர்.
18-வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் குற்ற வழக்குகளை அதிகமாக கொண்டிருப்பவர்கள் தென்னிந்திய எம்பிக்கள்தான். கேரளாவில் 95% எம்பிக்களும் தெலுங்கானாவில் 82% எம்பிக்களும் ஒடிஷாவில் 76.2% எம்பிக்களும் கிரிமின வழக்குகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications