ஒரே நாளில் 2003 பேர் பலி.. இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் முதல் முறையாக 3.4% ஆக உயர்வு.. ஏன்?
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் 2003 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது இதுதான் முதல் முறை.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 974 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 3 லட்சத்து 54 ஆயிரத்து 65 என்ற அளவில் உள்ளது.
இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை என்பது மற்ற உலக நாடுகளை ஒப்பிட்டால் மிகவும் குறைவாக இருக்கிறது. இது பெருமைப்படத்தக்க விஷயம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுபோன்ற ஒரு புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

மும்பை நிலவரம்
மும்பையில் கடந்த ஒருமாதமாக பலி எண்ணிக்கை விட்டுப்போயுள்ளது. தனியார் மருத்துவமனைகள் சரியான புள்ளி விவரத்தை அரசுக்கு அளிக்கவில்லை. எனவே, மாநகராட்சி தற்போது சேகரித்து அதை புள்ளி விவரத்தோடு சேர்த்துள்ளது. சுமார் 1400 பலி எண்ணிக்கை இதுபோல விடுபட்டுப் போனது தெரிய வந்தது. அதுவும் சேர்க்கப்பட்டதால் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் இதை சுகாதாரத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கவில்லை.

டெல்லி பலி எண்ணிக்கை
மகாராஷ்டிரா மட்டுமல்ல, டெல்லியிலும், பல பலி எண்ணிக்கை விடுபட்டு போயுள்ளது. டெல்லியில் பலி எண்ணிக்கை 437 அதிகரித்துள்ளது, மகாராஷ்டிராவில் 1,409 அதிகரித்துள்ளது. எனவேதான், மொத்த பலி எண்ணிக்கை கூடியுள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் உயிரிழப்பு விகிதம் என்பது 2.9 சதவீதத்திலிருந்து 3.4 சதவீதமாக உயர்ந்தது.

முதல் முறையாக உயர்வு
இந்தியாவை பொறுத்தளவில், கொரோனா இறப்பு விகிதம், 3 சதவீதத்திற்கும் கீழ்தான் இருந்தது. 2.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஆனால், சமீப காலங்களில், முன்பைவிடவும், இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இதை பார்க்க முடிகிறது. எனவே, இப்போது, 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வைரஸ் வலிமை
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் தற்போது வலிமையானதாக மாறியுள்ளது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிகம் தேவைப்படுகிறது. நோயாளிகளுக்கு காய்ச்சல், உடல்வலி போன்றவை அதிகரித்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications