334 பேரை பலி கொண்ட 2023-ம் ஆண்டு ரயில் விபத்துகள்! இந்த ஆண்டிலும் துயரம் தொடருதே!
டெல்லி: 2023-ம் ஆண்டில் ரயில் விபத்துகள் உள்ளிட்ட ரயில்வே துறை சார்ந்த சம்பவங்களில் மொத்தம் 334 பேர் பலியாகி இருந்தனர். இந்த ஆண்டிலும் ரயில் விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடருகிறது.
இந்தியாவில் பொதுமக்களின் போக்குவரத்தில் ரயில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேநேரத்தில் ரயில் விபத்துகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கத்தான் செய்கிறது.

2023-ம் ஆண்டு மட்டும் ரயில் விபத்து உள்ளிட்ட ரயில்வே துறை சார்ந்த விபத்துகளில் 334 பேர் பலியாகினர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதி கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 2வயது குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர். கடந்த ஆன்டு ஜூன் 2-ந் தேதி ஒடிஷாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து காட்சிகள் நெஞ்சைவிட்டு அகலாதவை. ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் 20 பெட்டிகள் உருக்குலைந்த நிலையில் தடம் புரண்டன. நாட்டையே உலுக்கிய இந்த பயங்கர விபத்தில் மொத்தம் 296 பேர் பலியாகினர். 1200 பேர் படுகாயமடைந்தனர். மிசோரம் மாநிலத்தில் ரயில்வே பால கட்டுமானப் பணியில் 18 பேர் பலியாகினர். மதுரையில் லக்னோ- ராமேஸ்வரம் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர்.
இந்த ஆண்டிலும் இந்த துயரம் தொடருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் 2 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து இன்று திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தற்போது வரை 8 பேர் பலியாகி உள்ளனர். சிக்னலை மீறி சரக்கு ரயில் அதிவேகமாக சென்று நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியதில் 3 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. இதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இத்தகைய ரயில்வே துறை சார் விபத்துகளை தடுக்க போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை தேவை என ஒவ்வொரு முறையும் வலியுறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications