பரிதாபம்.. சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்ற 42 புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்துகளில் பலி
டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து, லாக்டவுனின்போது, சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்ல முயற்சித்த சுமார் 42 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலை விபத்துக்களில் இறந்துள்ளதாக, சேவ் லைஃப் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 24 அன்று மே 3 வரை லாக்டவுன் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. அப்போது முதல், ஏற்பட்ட சாலை விபத்துக்கள் குறித்து இந்த அறிக்கை ஆய்வு செய்து விவரம் சமர்ப்பித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மொத்தம் 140 பேர் சாலை விபத்துக்களில் இறந்தனர். இந்த இறப்புகளில் 30% பேர் நடந்து சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். அல்லது பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஒளிந்துகொண்டு தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முயன்றவர்கள்.
லாக் டவுனின் இரண்டு கட்டங்களில் நாடு முழுவதும் 600 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. புலம்பெயர்ந்த 42 தொழிலாளர்கள் தவிர, 17 அத்தியாவசிய தொழிலாளர்களும் சாலை விபத்துக்களில் இறந்தனர்.
"பல மாநிலங்களிலிருந்து எங்களுக்கு இன்னும் உரிய பதில்கள் கிடைக்காததால் இந்த எண்களை குறைந்தபட்ச எண்களாகத்தான் கருத வேண்டும்" என்று சேவ் லைஃப் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் திவாரி கூறினார்.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், அசாம், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய 9 மாநிலங்களில் விபத்துகளில், 140 பேர் உயிரிழந்துள்ளனர். லாக்டவுனின்போது சாலை விபத்துக்களில் அதிகம் பேர் பலியான மாநிலம் பஞ்சாப். அதைத் தொடர்ந்து கேரளா, டெல்லி மற்றும் கர்நாடகா இருந்தன.
"ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்கள் இந்தியாவில் நடக்கின்றன. லாக்டவுன் காலத்தில் இறப்பு எண்ணிக்கையில், சரிவு காணப்பட்டாலும், 600 விபத்துகளில் 140 இறப்புகள் என்பது, மோசமானது. நமது சாலைகளின், இன்ஜினியரிங் தவறுகளை சரிசெய்ய லாக்டவுன் காலத்தை அரசுகள் பயன்படுத்த வேண்டும். இதனால் லாக்டவுன் முடிந்ததும், சாலை விபத்துக்களை குறைத்துவிடலாம் " என்று திவாரி கூறினார்.