5 கிலோ உணவு தானியம் இலவசம்... 80 கோடி மக்களுக்கு கொரோனா நிவாரணம் அறிவித்த மோடி
நாடு முழுவதும் மே, ஜூன் மாதங்களில் 5 கிலோ இலவச தானியங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் மோடி கூறியுள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடியின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களில் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் இதற்காக ரூ. 26000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரியும் மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சம் பேர் வரை கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார் மோடி.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் இதற்காக 26000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மோடி.