50 பிணைக் கைதிகள், 50 பாகிஸ்தான் ராணுவத்தினரை கொன்று விட்டோம்- பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு
டெல்லி: பாகிஸ்தானில் 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 50 பேரையும் தங்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர் 50 பேரையும் கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் ராணுவமோ, 30 பலுசிஸ்தான் தீவிரவாதிகளை கொன்று 190 பயணிகளை பாதுகாப்பாக மீட்டதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண மக்கள், தனிநாடு கோரி பல ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை 100க்கும் மேற்பட்ட பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர் கடத்திச் சென்றனர். இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இதனையடுத்து பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்திடம் இருந்து பயணிகளை பாதுகாப்பாக மீட்பதற்கான அதிரடி நடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டது. கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இந்த மீட்பு நடவடிக்கையில் இதுவரை 190 பயணிகள் பாதுகாப்பாக ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் பலுசிஸ்தான் விடுதலை ராணுவமோ, பாகிஸ்தான் ராணுவம் தங்கள் மீது மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி தந்துள்ளோம்; இதுவரை 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்; அதேபோல பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 50 பேரும் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளது.
பலுசிஸ்தான் ராணுவ விடுதலையின் இந்த கடத்தலுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் பாகிஸ்தான் இடையே ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது.
யார் இந்த பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்?
1947-ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனிநாடாக பிரிக்கப்பட்ட போது பலுசிஸ்தான் மாகாணமும் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. இதற்கு எதிராக அப்போது முதலே பலுசிஸ்தான் மக்களின் போராட்டமும் தொடங்கியது. இதன் விளைவாக உருவானதே பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அல்லது பலூச் விடுதலை ராணுவம்.
பலூச் என்பது தனி தேசிய இனம்; இந்த மக்களுக்கு தங்களைத் தாங்களே ஆளுகிற சுயர்நிர்ணய உரிமை உண்டு என்ற ஐநா கோட்பாட்டின் அடிப்படையில் தனிநாடு கோரி பலூச் மக்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் அரசால் பலூச் விடுதலை ராணுவம் தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.












Click it and Unblock the Notifications