சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி: சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, 66 காவல்துறை அதிகாரிகளால் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்றுள்ள சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருட பணி நீட்டிப்பு அளித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது.

சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக, சுமார் 66 போலீஸ் உயர் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தங்களை துன்புறுத்துவதாக காவல் அதிகாரிகள் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் பொன்.மாணிக்கவேல் விளம்பர நோக்கில் செயல்பட்டு கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தங்களை ஈடுபட உத்தரவிடுவதாகவும்
மனுவில் குற்றம் சாட்டியிருந்தனர்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை எனவும் அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
66 காவல் உயரதிகாரிகளின் இந்த மனு மீதான வாத பிரதிவாதங்கள் முடிந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் காவல்துறை அதிகாரிகளின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications