சாலையின் குறுக்கே கிடந்த10 அடி நீள பாம்பு.. ஒரே செகண்ட் தான்..அலேக்காக தூக்கிய நபர்.. பரவும் வீடியோ!
டெல்லி: சாலையின் குறுக்கே நகர முடியாமல் கிடந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஒருவர் ஒற்றை கையினால் அலேக்காக தூக்கி சாலையோரத்தில் விடும் காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
'பாம்பை கண்டால் படையும் நடுங்கும்' என ஒரு பழமொழி உண்டு. பாம்பை காணக்கூட வேண்டாம், பாம்பு என்று யாரேனும் அலறினாலே உடலில் நடுக்கம் ஏற்படும்.
அந்த அளவுக்கு பாம்பு என்றால் ஒரு அலர்ஜி இல்லாதவராகவே இருக்க முடியாது. கொடிய விஷம் கொண்ட பல பாம்புகள் அவ்வப்போது தீண்டி சிலர் உயிரிழப்பதாக செய்திகளும் அடிக்கடி பார்த்து இருப்போம். சில நேரங்களில் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள் கூட துரதிர்ஷ்டவசமாக பாம்பு கடித்து இறக்க நேரிடுகிறது
மலைப்பாம்பை அந்த இடத்தில் நெளிய விட்டபடி.. பதற வைத்த கேப்ரியெல்லா செல்லஸ்!
மலைப்பாம்பு
இந்த நிலையில், ஒரு பெரிய மலைப்பாம்பை எந்த அச்சமும் இன்றி ஒருநபர் ஒத்த கையால் அலேக்காக தூக்கி வேறு இடத்தில் வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டிங் ஆகி நெட்டிசன்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ஐ.எப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 17 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், இரு புறமும் அடந்த புல்வெளிகளும் புதர்களுமாக காட்சி தருகிறது. சுற்றிலும் இருள் சூழ்ந்த அந்த இடத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சத்தில் ஒரு மலைப்பாம்பு சாலையை கடக்க முடியாமல் நடு ரோட்டில் கிடப்பது போல தெரிகிறது.
எவ்வித அச்சமும் இன்றி..
அப்போது அங்கு வரும் ஒருவர் எந்த வித சலனமும் அச்சமும் இன்றி பாம்பை தனது கையால் டக்கென்று தூக்குகிறார். பாம்பும் சீறுவது போல் தெரிகிறது. பார்ப்பவர்களை ஒரு நொடி திடுக்கிட வைக்கும் வகையில் இந்தக் காட்சி அமைந்துள்ளது. பாம்பு சீறுவது போல தெரிந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்ததாத அந்த நபர், பாம்பை அலேக்காக ஒற்றை கையினால் தூக்கி வனப்பகுதிக்குள் விடுகிறார். இதையடுத்தும் பாம்பும் வேகமாக ஊர்ந்து சென்று விடுகிறது. ஒரு திரில் படம் போல தோன்றும் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகிறது.
உங்கள் பார்வை என்ன?
இந்த வீடியோவை பகிர்ந்த ஐஎப்.எஸ் அதிகாரி தனது பதிவில், ''இதைப்பற்றிய உங்கள் பார்வை என்ன? வனவிலங்குகளின் வாழ்விடத்திற்கு சென்று அதை தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிறதா??.. அல்லது சாலை விபத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறதா?.. தென் இந்தியாவில் உள்ள வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
துணிச்சல் மிக்கவர்தான்
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோ பதிவுக்கு கீழே தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ''வெறும் கையால் பாம்பை எந்த அச்சமும் இன்றி இப்படி தூக்கும் இந்த நபர் உண்மையில் துணிச்சல் மிக்கவர்தான்'' என்று பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலரோ வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் இரவு நேரத்தில் ஏன் பயணிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஒரு நெட்டிசன் கூறுகையில், 'இது பாராட்டுக்குரியதுதான்.. இருந்தாலும் ஆபத்து நிறைந்தது அல்லவா..' என்று பதிவிட்டுள்ளார்.