நான் யார்?.. மோடி கேட்ட கேள்வி! நீங்க டிவியில் தானே வேலை பார்க்குறீங்க? சிரிக்க வைத்த சிறுமி பதில்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என இரு தரப்பிலும் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடும் அமளியால் முடக்கப்பட்டுள்ளது.
20 எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே சுமார் 50 மணி நேர தொடர் தர்ணா போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியிடம் குழந்தை ஒன்று சந்தித்து பேசிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி உரையாடல்
மத்திய பிரதேசத்தின் பாஜக எம்.பியான அனில் ஃபிரோசியா, பிரதமர் மோடியை காண்பதற்கு தனது குடும்பத்தை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அனில் ஃபிரோசியாவின் 5 வயது மகள் அஹானா ஃபிரோசியா, பிரதமரை சந்தித்து பேசினார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரை சந்தித்த சிறுமி அஹானா ஃபிரோஜியா இந்த சம்பவம் உண்மையானதாக என்று ஆச்சரியத்தில் நெகிழ்ந்துபோனார்.

என்ன கேட்டார்
அப்போது "நான் யார் எனத் தெரியுமா?" என பிரதமர் கேள்வியெழுப்பினார். அதற்கு சற்றும் தாமதிக்காமல், "நீங்கள்தான் பிரதமர் மோடி" என பதிலளித்தார் சிறுமி அஹானா ஃபிரோசியா. மேலும், "உங்களை நான் தினமும் டிவியில் காண்கிறேன்" என்றும் சிறுமி பதிலளித்தார். "சரி நான் என்ன செய்கிறேன் என்று தெரியுமா?" என மீண்டும் சிறுமியிடம் பிரதமர் கேள்வியெழுப்பினார். உடனே சிறுமி, "தெரியும், நீங்கள் மக்களவை டிவியில் தானே பணியாற்றுகிறீர்கள்" என்று சொன்னார். இதைகேட்டு பிரதமர் சிரிக்கவே, அந்த அறை முழுவதும் சிரிப்பலை எழுந்தது. பின்னர் சிறுமிக்கு பிரதமர் சாக்லேட் வழங்கினார்.

டிவி
கடந்த பிப்ரவரியில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜினியில் பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "இந்த தொகுதி எம்.பி அனில் ஃபிரோசியா, அவரது தொகுதியின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கு நான் ஒரு நிபந்தனை விதிக்கிறேன். அவர் தற்போது அதிக உடல் எடையை கொண்டிருக்கிறார். அதை அவர் குறைக்க வேண்டும். அப்படி அவர் குறைக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் நான் அவர் சார்ந்த தொகுதிக்கு ரூ.1,000 கோடியை ஒதுக்குகிறேன்.

சிரிப்பு
நானும் தொடக்கத்தில் அதிக உடல் எடையில் இருந்தேன். தற்போது குறைத்திருக்கிறேன். எனவே இதை எவ்வாறு செய்வது என நான் அவருக்க கூறுகிறேன்." என்று கூறியிருந்தார். இதனையடுத்து சில மாதங்கள் கழித்து அனில் ஃபிரோசியா, மத்திய அமைச்சரிடம் தான் 21 கிலோவை குறைத்துள்ளதாகவும், எனவே எனது தொகுதிக்கு ரூ.21,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சம்பவம் சில நாட்களுக்க முன்னர் பேசப்பட்டது. இவர்தான் தற்போது தனது குடும்பத்துடன் பிரதமரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications