சொல்லி அடித்தார்.. 184 நாடுகளை ஒன்று திரட்டிய சென்னைக்காரர்.. யுஎன்எஸ்சியில் இந்தியாவின் மாஸ் வெற்றி
டெல்லி: ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு பின் சென்னையை சேர்ந்த அதிகாரி ஒருவரின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
ஐநா பாதுகாப்பு கவுன்சலில் உறுப்பினர்களை தேர்வு செய்ய நேற்று வாக்கெடுப்பு நடந்தது. நேற்று நடந்த தேர்தலில் இந்தியா வெற்றிபெற்று தற்காலிக உறுப்பினராக ஆகியுள்ளது. 2021-2022 வரை இந்தியா இதில் உறுப்பினராக இருக்கும்.
இந்தியா 8வது முறையாக இதில் உறுப்பினர் ஆகிறது. இது இந்தியாவிற்கு ராஜாங்க ரீதியான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
சீனாவிற்கு தொடக்கமே தோல்வி.. யுஎன்எஸ்சியில் காலடி எடுத்து வைத்த இந்தியா.. இனிதான் அதிரடி ஆட்டமே!
செம வெற்றி
இந்த தேர்தலில் இந்தியாவிற்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. கனடா போன்ற நாடுகள் கூட ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் இந்த முறை தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இந்தியா அசால்ட்டாக இதில் வென்றுள்ளது. 192 நாடுகளில் மொத்தம் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளது. ஆசியாவில் இருக்கும் முக்கியமான நாடுகள் எல்லாம் இந்தியாவிற்கு வாக்களித்துள்ளது.
யார் காரணம்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சேர்வதற்கும், இந்தியாவின் இந்த அசாத்திய வெற்றிக்கு பின்பும் தமிழர் ஒருவரின் பங்கு முக்கியமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி என்பவர்தான் இந்தியா இந்த தேர்தலில் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர். இவரின் தீவிர முயற்சிதான் இந்தியாவிற்கான வெற்றியை தேடிக்கொடுத்து உள்ளது.
யார் இவர்
இந்தியாவின் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த திருமூர்த்தி தமிழகத்தை சேர்ந்தவர். இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில்தான் இவர் காமர்ஸ் பிரிவில் இளங்கலை பட்டம் படித்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய இவர் 1985ல் ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்வானார். இவர் பல நாடுகளின் இந்தியாவின் வெளியுறவுத்துறையில் பல பொறுப்புகளை வகித்து இருக்கிறார்.
அதிக அனுபவம்
வெளியுறவுத்துறை, ராஜாங்க உறவுகளில் இவருக்கு அதிக அனுபவம் இருக்கிறது. இதனால்தான் இவர் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா சார்பாக அனுப்பப்பட்டார். கைரோ, ஜெனிவா, காசா, வாஷிங்க்டன், ஜகர்தா ஆகிய இடங்களில் இவர் வெளியுறவுத்துறை அதிகாரியாக பொறுப்பு வகித்து உள்ளார். அதேபோல் வங்கதேசம், இலங்கை, மியான்மர், பூடான், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளராகவும், துணை செயலாளராகவும் இவர் இருந்துள்ளார்.
பிரச்சாரம் செய்தார்
ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சேருவதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதற்காக சீனா உள்ளடி வேலைகள் கூட செய்தது. ஆனால் சீனாவை மீறி திருமூர்த்தி மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ராஜாங்க ரீதியாக நாடுகளை இந்தியா பக்கம் கொண்டு வந்தார். தனது பேச்சுவார்த்தை மூலம் 184 நாடுகளை ஒன்றாக திரட்டி இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து உள்ளார்.
பெரும் தோல்வி
இந்தியாவிற்கு எதிராக சீனா மற்றும் பாகிஸ்தானின் பிரச்சாரம் முழுக்க முழுக்க தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா இதில் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று திருமூர்த்தி கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமூர்த்தி தனது பேட்டியில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த முறை நாம் கண்டிப்பாக இடம் பெறுவோம்.10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாம் இதில் உறுப்பினராக போகிறோம்.
ஆதரவு
15 நாடுகளில் 75% நாடுகள் நமக்கு ஆதரவாக வாக்கு அளிக்க உள்ளது. இதற்கான பேச்சுக்கள் நடந்து வருகிறது. நம்முடைய குரலை உலகம் கேட்க வேண்டும். அதற்கான பணிகளை கண்டிப்பாக செய்வேன். இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் பொய்யான பிரச்சாரத்தை யாரும் கருத்தில் கொள்ளவில்லை. இதனால் இந்தியா கண்டிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சேரும், என்று அவர் கூறி இருந்தார் . தற்போது அதேபோல் இந்தியாவும் இதில் வெற்றிபெற்றுள்ளது.