தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட.. உயிரிழப்பை தடுக்குமாம்.. நம்பிக்கை கொடுக்கும் தரவுகள்.. முழு விவரம்!
டெல்லி: கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் கூட இறப்புகளைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் கொரோனா வைரஸை தடுப்பதில் மிகப்பெரிய பேராயுதம் தடுப்பூசியாகும்.
தொடக்க காலத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆய்வு முடிவுகள்
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் கூட இறப்புகளைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் இணைந்து ஆய்வை நடத்தியுள்ளன. இந்த ஆய்வு ஜூன் 21 இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறை தரவுகள்
இந்தியாவின் தமிழ்நாட்டில் அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே இறப்புகளைத் தடுப்பதில் கொரோனா தடுப்பூசி செயல்திறன்' என்ற தலைப்பில் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காவல் துறையால் ஆவணப்படுத்தப்பட்ட தரவைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வின்படி, பிப்ரவரி 1 முதல் மே 14 வரை 32,792 போலீசார் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்றனர், 67,673 பேர் இரண்டையும் பெற்றனர். 17,059 போலீசார் ஒரு ஷாட் கூட பெறவில்லை.

இறப்பு விகிதம் மிக குறைவு
ஏப்ரல் 13 முதல் மே 14 வரை இந்த போலீசாரில் 31 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த 31 இறப்புகளில், நான்கு பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளனர், ஏழு பேர் ஒரு டோஸ் எடுத்துள்ளனர், மீதமுள்ள 20 பேர் ஒரு டோஸ் கூட போடவில்லை என்று ஆய்வு கூறுகிறது. "ஒன்று மற்றும் இரண்டு தடுப்பூசி அளவுகளை பெற்ற போலீசாரின் இறப்புகள் முறையே 0.18 மற்றும் 0.05 சதவீதம் (1,000 பணியாளர்களுக்கு) என்ற அளவிலேயே நிகழ்ந்துள்ளது.

தீர்வு காண உதவும்
கொரோனா இறப்புகளை தடுப்பதில் முதல் டோஸ் 82 சதவீதம், இரண்டாவது டோஸ் 95 சதவீதம் பலன் அளிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி தயக்கத்தின் பிரச்சினைக்கு தீர்வு காண இதுபோன்ற தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications