இந்தியா முழுவதும் 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கம்.. இதுதான் காரணம்
டெல்லி: நாடு முழுவதும் 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. அண்மையில் 7 வயதைக் கடந்த குழந்தைகளின் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன.
அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, பள்ளிகளில் ஊக்கத் தொகை பெற, வங்கிக் கணக்கு துவங்க என அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. இந்நிலையில், ஆதார் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரின் ஆதார் விவரங்களையும் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆதார் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், அண்மையில் ஏழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், குழந்தைகளுக்கான ப்ளூ நிற ஆதார் கார்டுகளை பயன்படுத்தி வந்தால் தங்களது தகவல்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று யுஐடிஏஐ தெரிவித்திருந்தது. அதாவது, 5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்த பின்னரும் தங்களது கைரேகை, கருவிழி, புகைப்படம் போன்ற 'பயோமெட்ரிக்' விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்திருந்தது.
அருகில் உள்ள இசேவை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களில் குழந்தைகளின் தகவல்களைப் புதுப்பிக்கலாம். 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்ஸை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதேபோல, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தையின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரில் இணைக்கலாம்.
7 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கப்படும் ஆதாருக்கு கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். தங்களது ஆதார் விவரங்களை புதுப்பிக்காத குழந்தைகளின் ஆதாா் அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு, ஆதார் புதுப்பிக்கக் கோரி யுஐடிஏஐ குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களிடம் இருந்து உயிரிழந்தவர்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டு 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஆதார் எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்யப்படும் சம்பவங்களைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்போது 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. உயிரிந்தவர்களின் ஆதார் எண்களை முடக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடும்பத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் ஆதார் எண்ணை முடக்கலாம். தற்போது அனைத்து மாநிலங்களிலும் இருந்து உயிரழந்தவர்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டு 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications