ஆண்டுக்கு 16,000 உயிரினங்கள் ரயில் மோதி பலி.. இதிலும் உ.பிதான் டாப்.. தமிழ்நாட்டில் எத்தனை தெரியுமா?
டெல்லி: சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மோதி சில கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நாடு முழுவதும் ஆண்டு தோறும் ரயில் விபத்தில் சிக்கி சுமார் 16,000 உயிரினங்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை இந்தியன் ரயில்வே கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தது. அதன்படி ரயில் பயணங்களை வேகமாக்க திட்டமிடப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் வந்தே பாரத் ரயில். இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் என்ற அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த ரயில் ஓடத் தொடங்கிய சில நாட்களிலேயே ஏராளமான கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. தொடக்கத்தில் ஒன்றிரண்டு விபத்துக்கள் வெளியில் தெரிந்தன. ஆனால் இந்த சேவை தொடங்கப்பட்டு 6 மாதங்களில் சுமார் 68 கால்நடைகள் மீது ரயில் மோதியுள்ளதாக பின்னர் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இவ்வாறு இருக்கையில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி முதல் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்தியாவில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த உயிரினங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
திருமணம் செய்ய மறுத்த மருத்துவ மாணவி.. கழுத்தறுத்து கொன்ற காதலன்.. அலறும் ஆந்திர பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
இந்த விவரத்தை சிஏஜி தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி சுமார் 16,000 உயிரினங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரயில் மோதி உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவு உயிரினங்கள் பலியாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் வடக்கு மத்திய ரயில்வே (NCR), வடக்கு ரயில்வே (NR), வடகிழக்கு ரயில்வே (NER) மற்றும் கிழக்கு மத்திய ரயில்வே (ECR) உட்பட நான்கு ரயில்வே மண்டலங்கள் உள்ளன. இதில் 2017 முதல் 2022ம் ஆண்டுவரை சுமார் 23,201 உயிரினங்கள் ரயில்கள் மோதி பலியாகியுள்ளன. அதேபோல 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2022 ஏப்ரல் மாதம் வரை சுமார் 18,655 உயிரினங்கள் பலியாகியுள்ளன.
விபத்து
உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் முதல் தெற்கில் லலித்பூர் மற்றும் கிழக்கில் முகல் சராய் (தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு) வரை NCR மண்டலமாகும்.
இந்த பகுதியில் 23,201 உயிரினங்கள் பலியாகியுள்ளன. எனவே இந்த பகுதிகளில் ரயில் இயக்கம் சுமார் 11,137 மணி நேரம் வரை தாமகியுள்ளது.
இது குறித்து மண்டலத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு சேகர் உபாத்யாய் கூறுகையில், "விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்களில் ரயில்வே தண்டவாளத்தை பாதுகாக்க சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு
இப்படி சில இடங்களில் சுற்று சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் இன்னும் பல இடங்கள் பாக்கி இருக்கிறது. மட்டுமல்லாது ஏற்கெனவே சுற்றுசுவர் எழுப்பிய இடங்களில் சில சுவர்கள் பழுதடைந்துள்ளன. இதனையும் சீரமைக்க வேண்டி இருக்கிறது. இவையனைத்தும் உடனடியாக சரிசெய்யப்படும்" என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நிலைமை இவ்வாறு இருக்கையில் மற்ற மண்டலங்களில் விபத்துகள் ஓரளவு குறைவாகவே பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கார்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை உள்ளடக்கிய தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் வெறும் 7 உயிரினங்கள்தான் ரயில் மோதி பலியாகியுள்ளன.
ஒட்டுமொத்தமாக
அதேபோல ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளையும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில பகுதிகளை கொண்டிருக்கும் தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் 2,219 உயிரினங்கள் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளன. மேலும், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வட மேற்கு ரயில்வே மண்டலத்தில் 6,740 உயிரினங்கள் ரயில் மோதி பலியாகியுள்ளளன. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 2017 முதல் 2021 வரை 63,345 உயிரினங்கள் பலியாகியுள்ளன. இதில் 73 யானைகளும் அடங்கும் என்று சிஏஜி தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.