புது கிரிமினல் சட்டம்! மனைவி என்றாலும் மைனர் பெண்ணுடன் உடலுறவு கொண்டால் பலாத்காரம் தான்!
டெல்லி: மத்திய அரசு புதிய சட்ட மசோதாக்களை கொண்டு வந்திருக்கும் நிலையில், அதில் மனைவி மைனராக இருந்தால் அவர்களுடன் உடலுறவு கொள்வதைக் குற்றமாகக் கருதும் வகையிலான சட்டம் இடம் பெற்றுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை உடன் நிறைவடைந்தது.. இதற்கிடையே கடைசி நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறிப்பாக நமது நாட்டில் 160 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டன. இதனை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். அதன் பிறகு இது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
சட்டம்: இதில் இந்தியத் தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியச் சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக புது மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்குப் பதிலாகப் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, பாரதிய சக்ஷவா மசோதா தாக்கல் செய்யப்பட்டன. இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பல கடுமையான சட்டங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனைகளைக் கடுமையாக்கும் வகையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்கில் இந்த மசோதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களையும், இந்தியாவில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்தச் சட்டங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல முக்கிய பாயிண்டுகள் இடம்பெற்றுள்ளது.
புது விதிகள்: திருமணமான பெண்களின் ஒப்புதல் இல்லாமல் கணவர் உடலுறவு கொள்வதை இப்போது marital rape என்று அழைக்கிறார்கள். இதனைக் குற்றமாக அறிவித்து இதற்கு எதிராகச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இப்போது பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். மத்திய அரசின் புதிய சட்டத்தில் இதற்கு எதிரான தண்டனை இல்லை என்ற போதிலும், 18 வயதுக்குக் குறைவான பெண் மனைவியாக இருந்தாலும் அவர்களுடன் உடலுறவு கொள்வதை பலாத்காரமாகக் கருதும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு இணங்க இந்த சட்டம் அமைகிறது. அதன்படி மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுடன் உடலுறவு கொள்வது மட்டுமே பலாத்காரமாக கருத முடியாது என கூறப்பட்டுள்ளது. அதாவது 18 வயதிற்குக் கீழ் இருப்போருடன் உடலுறவு கொள்வதைப் பலாத்காரமாகவே கருத முடியும். தற்போதுள்ள சட்டப்படி இது 15 வயதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை திருமணங்களை இதுபோன்ற சட்டங்கள் தடுக்க உதவும் என்று ஒரு தரப்பினர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் marital rapeக்கும் மத்திய அரசு தகுந்த சட்டங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள். மேலும், இதில் மனைவியின் சம்மதம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
கடுமையாக்கப்படும் தண்டனைகள்: இது மட்டுமின்றி இந்த புதிய மசோதாவில் வேறு பல முக்கிய சட்டங்களும் இடம்பெற்றுள்ளது. அதன்படி மைனர் சிறுமிகளைப் பலாத்காரம் செய்தால் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க முடியும். மைனர் சிறுமியைக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டால் அனைத்து குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்க முடியும். மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி உடலுறவு கொள்வோருக்கான தண்டனைகளும் இதில் கடுமையாக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications