தமிழகம் குஜராத் இடையே நூற்றாண்டு பிணைப்பு! அடுத்து சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்! மன் கி பாத்தில் மோடி
டெல்லி: மன் கி பாத்தின் 99ஆவது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார். காசி தமிழ்ச் சங்கமம் குறித்துப் பேசிய அவர், வந்தே பாரத் ரயிலின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவையும் பாராட்டினார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுடன் மன் கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் உரையாடி வருகிறார். இதில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசுவார்.
அதன்படி இன்று மன் கி பாத்தின் 99ஆவது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார். காசி தமிழ்ச் சங்கமம் குறித்துப் பேசிய அவர், வந்தே பாரத் ரயிலின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவையும் பாராட்டினார்.

உடல் உறுப்பு தானம்
இன்று தனது மன் கி பாத் உரையில் பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டில் உடல் உறுப்பு தானங்கள் அதிகரித்துள்ளது. ஒருவர் உடல் உறுப்பை தானம் செய்தால் அதன் மூலம் 7.,8 பேரைக் காக்க முடிகிறது. உடல் உறுப்புகளை தானம் செய்வோர் கடவுளுக்கு இணையானவர்கள். உடல் உறுப்பு தானத்தை எளிமையாக்க நாடு முழுக்க ஒரே மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் முன்வந்து உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும்.

பெண்கள் சக்தி
வசந்த நவராத்திரி கொண்டாடுகிறதும். இந்த நேரத்தில் பெண்களின் பெருமையைப் பேசாமல் இருக்க முடியாது.. நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கிய முதல் பெண் என்ற பெருமையை சுரேகா யாதவ் பெற்றுள்ளார். அதேபோல ஊட்டியைச் சேர்ந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ் என்பவரின் 'தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. நாகாலாந்தில் முதல்முறையாகப் பெண்கள் சட்டசபைக்குள் நுழைந்துள்ளனர். ஒருவர் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். நாட்டின் கனவுகளை நிறைவேற்றும் புதிய சக்தியைப் பெண்கள் தருகிறார்கள்.

சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்
நாம் நமது கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். அதற்காகத் தான் தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையே இருக்கும் பழங்கால உறவுகளைக் கொண்டாடும் வகையில் காசி தமிழ்ச் சங்கம் கொண்டாடப்பட்டது. காசியும் தமிழ்நாடு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டிருந்தன. அதேபோல அடுத்து சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் ஏப்ரலில் நடைபெற உள்ளது..

தமிழ்நாடு சவுராஷ்டிரா தொடர்பு
சவுராஷ்டிராவுக்கும் தமிழர்களுக்கும் இடையே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தொடர்பு இருக்கும் நிலையில், அதைப் புதுப்பிக்கும் ஒரு நிகழ்வாக இது இருக்கும். தமிழகத்திற்கும் சவுராஷ்டிராவிற்கும் என்ன தொடர்பு எனப் பலரும் நினைக்கலாம். குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, பலர் தமிழகத்தில் குடியேறினார்கள். அவர்களைத் தான் நாம் 'சவுராஷ்டிரி தமிழர்' என அழைக்கிறோம்.

எப்போது நடக்கிறது
இன்று சவுராஷ்டிரா மக்களின் உணவு முறை, பழக்க வழக்கத்தைப் பலரும் பின்பற்றுகின்றனர். இது தொடர்பாகப் பலரும் கடிதமும் எழுதியுள்ளனர். மதுரையை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரும் சவுராஷ்டிரா தமிழ் உறவுகளை மீண்டும் புதுப்பிப்பது குறித்து தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஜெயச்சந்திரனின் இந்த வார்த்தைகள் ஆயிரகணக்கான தமிழர்களின் வார்த்தைகள். அதன்படி வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications