"யாரும் எதுவும் பேசக்கூடாது!" டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு! கப்சிப் ஆகும் காங்கிரஸ் நிர்வாகிகள்?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் டெல்லி தலைமை மிக முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது.
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த 2019இல் அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகினார். புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் நிர்வாகிகள் மத்தியில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவராகச் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாகவே சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார்.
காங். தலைவர் தேர்தல்: நாளை வேட்பு மனுத் தாக்கல்- ரேஸில் கெலாட், சசி தரூர், கமல்நாத், திக்விஜய்சிங்?
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, வரும் அக். 17இல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை 24ஆம் தேதி தொடங்குகிறது. பலரும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்திய போதிலும், அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
சசி தரூர்
இதனிடையே நேரு குடும்பத்தினர் ராஜஸ்தான் முதல்வரும் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டை களமிறக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இடையே கேரள எம்பியான சசி தரூர் தலைவரும் பதவிக்குப் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியானது. சசி தரூரின் இந்த முடிவை ராகுல் மற்றும் சோனியா காந்தி ஆதரவாளர்கள் வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கி உள்ளனர்.
விமர்சனம்
நேற்று காங்கிரசின் கவுரவ் வல்லப், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் லாட்டிற்கு ஆதரவு அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சசி தரூரை மிகக் கடுமையாகச் சாடிய அவர், சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்தபோது அவருக்குக் கடிதம் அனுப்பியதுதான் சசி தரூர் கட்சிக்குச் செய்த ஒரே பங்களிப்பு என்றும் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு சாடியிருந்தார். டெல்லி தலைமை விரும்புவதாலேயே அசோக் கெலாட்டிற்கு எதிராகப் போட்டியிடும் சசி தரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பதாகத் தகவல் பரவியது.
உத்தரவு
இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் முக்கிய உத்தரவை அனுப்பி உள்ளது. காங்கிரசில் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு நபரையும் கண்டிப்பாக விமர்சிக்கக் கூடாது என்று அனைத்து செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் ஐடி பிரிவு பொறுப்பாளர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் முக்கிய உத்தரவை அனுப்பி உள்ளார்.
மதிக்க வேண்டும்
அனைவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும் தான் என்றாலும் கூட காங்கிரஸில் மட்டுமே தலைவர் பதவி தேர்தல் ஜனநாயகம் மற்றும் வெளிப்படையாக நடக்கும் என்பதால் அதை மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். எனவே தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு நபரையும் குறி வைத்து விமர்சிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
அசோக் கெலாட்
வரும் அக். 17ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் இடையே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மூத்த அரசியல்வாதியான அசோக் கெலாட்டே வெல்ல வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி காரணமாக அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்றால் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.