ஹைகோர்ட்டில் நெருக்கும் ஊழல் வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராஜேந்திர பாலாஜி
டெல்லி: தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை முறையான விதிகளை பின்பற்றாமல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிப்பதாக, அதிமுக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கே.டி.ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ராஜேந்திரபாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும் விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும், வழக்கை முடிக்க பொது துறை உத்தரவிட்டதாக அறிக்கையில் லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்து இருந்தது.

மாறுபட்ட தீர்ப்பு
இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் பெஞ்ச் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். ஆனால், பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது தேவையற்றது. செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போன்றது என்று கூறி, மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.

3வது நீதிபதி
இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க தேவை எழுந்தது. இதுகுறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தும் உத்தரவிட்டனர். இந்த நிலையில்தான், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் கடந்த ஜூன் மாத இறுதியில், நியமிக்கப்பட்டார். கடந்த 5ம் தேதி இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை இன்று ஒத்திவைத்து இருந்தனர். இன்று நண்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் , 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

உச்சநீதிமன்றம் சென்ற ராஜேந்திர பாலாஜி
விதிகளின்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கும் போது அதற்குரிய காரணங்களை விளக்கமாக நீதிபதிகள் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு விளக்கம் அளித்தால் மட்டுமே 3வது நீதிபதி விசாரிக்க முடியும். எனவே இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடிகள்
முன்னாள், அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருக்கு தொடர்பான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி இருந்தனர். ஆனால், இது பழிவாங்கும் போக்கு என்று அதிமுக தலைமை குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில்தான், ராஜேந்திர பாலாஜி மீதான வழக்குகளும் வேகம் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜேந்திர பாலாஜி மூவ்
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ராஜேந்திர பாலாஜி பாஜக கட்சி சென்றால் கூட, அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை தமிழக அரசு விசாரிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் ஒரு வழக்கில் விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. இந்த வழக்கில் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications