Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக பொதுக்குழு வழக்கு..சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 AIADMK general committee case: O.Panneerselvam files written statement at Supreme court

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் மூன்று நாட்களாக இந்த வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை கடந்த 10ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார்.

 AIADMK general committee case: O.Panneerselvam files written statement at Supreme court

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால் தான்
என்ற கருத்தை முன்வைத்தார் பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர். தொடர்ந்து வாதிட்ட அரிமா சுந்தரம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அதிமுக பொதுக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல் பொதுக்குழு எடுத்த முடிவுகள் குறித்து மட்டும் கேள்விக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது என்று வாதிட்டார்.

திமுகவின் பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது என்பது சாதாரண தொண்டனுக்கும் தெரியும் அப்படி இருக்கையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அது தெரியாதா? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத போது கட்சி நலன் கருதி தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியும்.

அதிமுக பொதுக்குழுவை பழனிச்சாமியின் விருப்பப்படி அவராக கூட்டியது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார்கள். ஆனால், உண்மையில் பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கு பேர் விருப்பத்தின் அடிப்படையில் தான் கூட்டம் கூட்டப்பட்டது. கட்சியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் கட்சியின் நலனுக்காக இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கானது அல்ல என வாதிட்டார்.

பன்னீர் செல்வம், பழனிசாமி ஆகியோர் தரப்பு வாதம் அடுத்தடுத்து நிறைவடைந்த நிலையில் 11ஆம் தேதியன்று அதிமுக தலைமை அலுவலகம் தரப்பு வாதம் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், முகுல் ரோஹத்கி, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அதிமுக சார்பில் வாதங்களை முன்வைத்தனர்.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மீண்டும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதிமுகவில் இல்லாத இரட்டை தலைமையை கொண்டு வந்ததே எடப்பாடி பழனிச்சாமிதான் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. எல்லாமே சரியாக போய் கொண்டிருக்கும் போது இரட்டை தலைமையை நீக்கி விட்டு மீண்டும் ஒற்றைத்தலைமை என்று கூறி குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதங்களை வரும் 16ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பரபரப்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் அதிமுக அலுவலகம் தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும். பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரின் தரப்பிலுமே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நீடிப்பாரா? ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் ஒருங்கிணைப்பாளராக அதிமுக அலுவலகத்திற்கு செல்வாரா என்பது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொருத்தே உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+