அமைச்சர் பதவி வேணும்னா 25 அதிமுக எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்யட்டும்! ரூல்ஸ் பேசும் விசிக எம்பி!
சென்னை: அதிமுக கொறடாவை நியமிக்கும் அதிகாரம் கே.பழனிசாமிக்கே உண்டு. அதிமுக எம்எல்ஏக்களை தவெக அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்த விவகாரம், தற்போது சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளையும், சட்ட விளக்கத்தையும் முன்வைத்துள்ளார்.

அவரது அறிக்கை கூறியிருப்பதாவது: அதிமுக கொறடா உத்தரவு யாரைச் சாரும்? சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவிலிருந்து பிரிந்த 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்களின் செயல், அரசியல் சாசனத்தின் பத்தாவது அட்டவணையின் (Tenth Schedule) கீழ் தகுதி நீக்கத்திற்கு உள்ளாகுமா என்பது ஒரு தீவிரமான கேள்வி.
இந்தச் சூழலில், அந்த எம்.எல்.ஏக்களை அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன. இது சட்டப்படி செல்லுமா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: 'சுபாஷ் தேசாய் எதிர் மகாராஷ்டிர அரசு' வழக்கில் உச்ச நீதிமன்றம் மிகத்தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, சட்டமன்றக் கட்சி அல்ல, அரசியல் கட்சிதான் (Political Party) 'கொறடா' (Whip) மற்றும் கட்சியின் தலைவரை நியமிக்கும் அதிகாரம் கொண்டது.
ஈபிஎஸ்-ன் அதிகாரம்: அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில், எடப்பாடி கே. பழனிசாமிக்கு மட்டுமே கொறடாவை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. எனவே, அவர் பிறப்பித்த உத்தரவு (Whip) அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களையும் கட்டுப்படுத்தும். அதனை மீறிய 25 பேரும் தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியவர்கள்.
அமைச்சர் பதவி: சட்டமும் அறமும் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, அவர்களை அமைச்சர்களாக நியமிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் சாசன விதி 164(1-B) படி, ஒரு உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே அவர் அமைச்சராகப் பதவி வகிக்கத் தடை விதிக்கப்படுகிறது. சபாநாயகரிடம் தகுதி நீக்க மனு நிலுவையில் இருக்கும் வரை, அவர்களை அமைச்சர்களாக நியமிக்கச் சட்டப்பூர்வமாகத் தடை ஏதுமில்லை என உச்ச நீதிமன்றம் ஒருமுறை கவனித்துள்ளது.
அரசியல் அறம்: சட்டப்படி இடம் இருந்தாலும், இது அரசியல் சாசன (Constitutional Morality) மற்றும் ஜனநாயக அறத்திற்கு எதிரானது. தகுதி நீக்க அச்சுறுத்தலில் இருப்பவர்களை அமைச்சர்களாக்குவது தவறான முன்னுதாரணமாகும்.
தீர்வு என்ன?
முதலமைச்சர் விஜய், அந்த எம்.எல்.ஏக்களை அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், "அந்த எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முறையாக தவெக-வில் இணைந்து, இடைத்தேர்தல் மூலம் மக்களின் புதிய ஆணையைப் பெற்று அமைச்சராவதே முறை."
இது ஒரு சட்டப் பிரச்சினை என்பதை விட அரசியல் ரீதியான கேள்வி. கட்சி தாவி வந்தவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டு மீண்டும் தேர்ந்தெடுப்பார்களா? என்பதே இந்த அரசியல் நகர்வின் உண்மையான வெற்றியைத் தீர்மானிக்கும். இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் இரு அணியாக பிளவுப்பட்டுள்ளதால் சட்டசபையில் யார் கொறடா என்ற விவகாரம் சபாநாயகரின் முடிவுக்காக காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications