"வாவ்".. கருவில் இருக்கும் சிசுவுக்கு.. இதய அறுவை சிகிச்சை.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை
மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால் குழந்தையின் உயிருக்கு தங்களால் உத்தரவாதம் தர முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டெல்லி: தாயின் கருவில் இருக்கும் சிசுவுக்கு மிக சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து டெல்லி எய்மஸ் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளில் கூட மருத்துவர்கள் செய்ய தயங்கும் அறுவை சிகிச்சையை, இந்திய மருத்துவர்கள் செய்திருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த அறுவை சிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது.. எந்த முறையை மருத்துவர்கள் கையாண்டனர் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

இதயத்தில் அடைப்பு
டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் 28 வயது கர்ப்பிணி ஒருவர் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே 3 முறை கர்ப்பமாகி கரு கலைந்திருந்தது. தற்போது அவர் 4-வது முறையாக கர்ப்பம் அடைந்திருக்கிறார். இதனிடையே, வழக்கமான பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் வந்திருந்தார். இந்த பரிசோதனையின் போது, அவரது கருவில் இருக்கும் குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்தக் குழந்தையை கருவிலேயே கலைத்துவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அப்பெண்ணும், அவரது கணவரும் அக்குழந்தையை பெற்றெடுக்க விரும்பினர்.

சிக்கலான அறுவை சிகிச்சை
பெற்றோரின் விருப்பத்தை மறுக்க முடியாத மருத்துவர்கள், கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். ஆனால், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால் குழந்தையின் உயிருக்கு தங்களால் உத்தரவாதம் தர முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, மிக மிக சவாலான இந்த அறுவை சிகிச்சையை மகப்பேறு மருத்துவர்கள், இதய மருத்துவர்கள் மற்றும் இதய மயக்க மருந்துத்துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர்.

திராட்சை இதயம்
அல்ட்ராசவுண்ட் (UltraSound) வழிகாட்டுதலின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தாயின் அடிவயிற்றில் துளையிட்டு மெல்லிய குழாய் உள்ளே செலுத்தப்பட்டது. பின்னர், அந்தக் குழாய், குழந்தையின் இதயத்துக்குள் துளையிட்டு உள்ளே கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பலூன் வடிவ குழாயை பயன்படுத்தி, குழந்தையின் திராட்சை அளவு கொண்ட இதயத்தில் இருந்த மிகச்சிறிய அடைப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டது.

சாதனை - பாராட்டு
இந்த அறுவை சிகிச்சையை 90 வினாடிகளில் (ஒன்றரை நிமிடங்கள்) மருத்துவர்கள் செய்து முடித்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகையில், "தாயின் அடிவயிற்றின் வழியாக கருவில் உள்ள குழந்தையின் இதயத்தில் ஒரு ஊசியை செலுத்தி அடைப்பை சரி செய்தோம். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் இதயம் நன்றாக வளரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், குழந்தை வளர வளர இதய நோயின் பாதிப்பு கணிசமாக குறையும். இந்த அறுவை சிகிச்சையை பொதுவாக மிக விரைவாக செய்ய வேணடும். இல்லையெனில் குழந்தைக்கு ஆபத்தாகிவிடும்" என்றனர். கருவில் இருக்கும் குழந்தைக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications