கொரோனாவால் உயிரிழந்தவர் உடலில்.. ஒரு நாளுக்கு மேல் வைரஸ் செயல்பாட்டில் இருக்காது.. எய்ம்ஸ் விளக்கம்!
டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலில் 24 மணி நேரத்திற்கு மேல் வைரஸ் உயிருடன் இருக்காது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தடய அறிவியல் துறை தலைவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- இறந்தவரிடமிருந்து பரவுவதற்கான ஆபத்து மிகவும் குறைவாகும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலில் மூக்கு மற்றும் தொண்டையில் 12 முதல் 24 மணி நேரத்திற்கு மேல் கொரோனா வைரஸ் செயல்பாட்டில் இருக்காது.
100 பேரின் உடல்களை சோதனை செய்தபோது இது எங்களுக்கு தெரியவந்தது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தோற்றால் உடல்களைக் கையாளும் நபர்கள் மாஸ்க்குகள் கையுறைகள் மற்றும் பி.பி.இ கிட்கள் அணிந்து கொள்ளலாம்.
உயிரிழந்தவர்களின் எலும்புகள் மற்றும் சாம்பலை(அஸ்தியை) சேகரிப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதில் இருந்து கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு முற்றிலும் கிடையாது என்று சுதிர் குப்தா கூறினார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அதனால் இறந்தவர்களின் உடல்கள் கண்ணியமான முறையில் தகனம் செய்யப்படவில்லை என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வருகின்றன. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தடய அறிவியல் துறை தலைவரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.