பஞ்சாபில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்! ஜன்னல்கள் பக்கம் எட்டி பார்க்காதீர்கள்
டெல்லி: பஞ்சாப்பில் உள்ள பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் ஜன்னலுக்கு அருகே நிற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் பதற்றமடைய தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தியதால் இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானங்களும் ஏவுகணைகளும் வானிலேயே இடைமறிக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டன.

இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையோர பகுதிகளில் ஆங்காங்கே இரு தரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இன்று மீண்டும் இந்த பதற்றம் நீடித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பதற்றம் நீடிக்கும் இடங்களில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்து வருகின்றன. இந்த நிலையில் காஷ்மீரில் என்ஐடி, என்ஐஎஃப்டி கல்லூரிகளில் படித்து வரும் 17 தமிழக மாணவர்கள் தங்களை மீட்கக் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

தற்போது பஞ்சாபில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் ஜன்னல் பகுதிகளில் யாரும் இருக்க வேண்டாம் என்றும். ஜன்னல்களில் போட்டுள்ள துணிகளை எடுக்குமாறும் விளக்குகளை அணைத்து வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விஷயத்தில் பீதி அடைய ஒன்றுமில்லை. சைரன் ஒலிக்கும். எல்லாம் முடிந்தவுடன் நாங்களே தகவல் சொல்லுவோம். அதுவரை அரசு கூறுவதை பின்பற்றுங்கள். இந்த பதற்றத்தை தணிக்க நம் ராணுவத்தினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். எனவே நாம் வீட்டிற்குள் இருந்து நம் ராணுவத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அமிருதசரஸ் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications