அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராகலாம்.. ஆனால்.. உச்சநீதிமன்றம் வைத்த செக்!
Recommended Video

டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும், அவரால் கொள்கை முடிவு எதுவும் எடுக்க முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராஜேஷ் அஸ்தானா நடுவே மோதல் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி அலோக் வர்மா மற்றும் அஸ்தானா ஆகிய இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, நாகேஸ்வர ராவை, இடைக்கால சிபிஐ இயக்குனராக நியமித்தது.
இதனிடையே அன்றைய தினமே உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் அலோக் வர்மா.

எதிர்க்கட்சிகள்
கட்டாய விடுமுறையில் அலோக் வர்மாவை அனுப்பியது சிபிஐ போன்ற தன்னாட்சி அமைப்பில் மத்திய அரசு தலையிடுவதை அம்பலப்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

உச்சநீதிமன்றம்
இதனிடையே, அலோக் வர்மா, தாக்கல் செய்த மனுவை விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது.

கொள்கை முடிவு
சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கியது சரியான நடவடிக்கை அல்ல என்று கூறி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். அதேநேரம், அலோக் வர்மா, எந்த ஒரு கொள்கை முடிவையும் எடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதமர் அடங்கிய கமிட்டி
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய கமிட்டி சிபிஐ இயக்குநர் மீதான குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும், மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்த நடவடிக்கைக்குதான் இந்த தடை பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, அலோக் வர்மா அதிகாரம் பறிக்கப்பட்ட நிலையிலதான் மீண்டும் சிபிஐ இயக்குநராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications