பஞ்சாப் தேர்தல்.. காங்கிரஸை வீழ்த்த பாஜக உடன் கூட்டணி.. நேரடியாக பிரதமரிடம் பேசிய அமரீந்தர் சிங்
டெல்லி: அடுத்தாண்டு பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் பாஜக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் பேசியுள்ளதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் 7 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 6 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு வரை அமரீந்தர் சிங் முதல்வராக இருந்தார்.
பரம்வீர் சிங்: காணாமல் போன முன்னாள் மும்பை ஆணையர் மீண்டும் பொது வெளியில் தோன்றினார்
பஞ்சாப் தேர்தல்
கடந்த சில மாதங்களாகவே அங்குப் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அமரீந்தர் சிங் இடையே மோதல் இருந்து வந்தது. இதையடுத்து பல காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை நீக்கிவிட்டு சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக நியமித்தது காங்கிரஸ் தலைமை. பஞ்சாபில் சுமார் 30% தலித்துகள் உள்ள நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டது முக்கிய நகர்வாகப் பார்க்கப்பட்டது.
பிரதமரிடம் பேச்சுவார்த்தை
இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில், அடுத்தாண்டு பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் பாஜக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் பேசியுள்ளதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
விரைவில் அறிவிப்பு வரும்
இது தொடர்பாக என்டிடிவி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு காண வேண்டும் என்பது தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் வைத்த ஒரே நிபந்தனை. இது தொடர்பாக நான் ஏற்கனவே உள்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். வரும் சனிக்கிழமை கூட்டணி தொடர்பாக பாஜக தலைவரிடமும் பேச உள்ளேன். விரைவில் முறையான அறிவிப்பு வெளியிடப்படும்.
என் பக்கம் வருவார்கள்
சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் மற்ற பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தவறு இல்லை. பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் சேர ஆர்வமாக உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு பலரும் என் பக்கம் வருவார்கள்" என்றார்.
பாஜகவுக்கே ஆதரவு
முன்னதாக அமரீந்தர் சிங் தனித்துப் போட்டியிட்டால் கிடைக்கும் இடங்கள் கூட பாஜக உடன் கூட்டணி அமைத்தால் கிடைக்காது எனப் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் தெரிவித்திருந்தார். இது குறித்துப் பேசிய அமரீந்தர் சிங், "இன்றைய நிலவரப்படி, பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு மிகப் பெரியளவில் ஆதரவு உள்ளது. இந்துக்கள் அனைவரும் பாஜக மற்றும் எனது கட்சியை ஆதரிக்கின்றனர். பஞ்சாபில் 36% இந்துக்கள் உள்ளனர். அந்த பகுதிகளில் காங்கிரஸை விட அதிக இடங்களில் வெல்லப் போகிறோம். விவசாயிகளிடமிருந்தும் எங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்.
பலர் இணைவார்கள்
காங்கிரஸ் கட்சியில் இருந்து தினமும் 4 அல்லது 5 எம்எல்ஏக்கள் என்னைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். சுமார் 30 முதல் 40 முக்கிய நபர்கள் விரைவில் எனது கட்சியில் சேரப்போகிறார்கள். அவர்கள் பெயரை இப்போது என்னால் வெளியிட முடியாது. ஆனால் விரைவில் நல்லது நடக்கும். காங்கிரஸ் மட்டுமின்றி பல கட்சியைச் சேர்ந்தவர்களும் என்னிடம் பேசுகின்றனர். முதலில் தேர்தலை அறிவிக்கட்டும், அடுத்து எல்லாம் நடக்கும்" என்றார்.
கூட்டணிக்கு எத்தனை இடம்
மேலும், கள நிலவரத்தை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது தாங்கள் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.