தீவிரமடையும் உக்ரைன் போர்.. விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு? மத்திய அரசு முக்கிய விளக்கம்
டெல்லி: உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை 3ஆவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் 3ஆவது நாளாக இன்றும் போர் தொடர்ந்து வருகிறது. முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கி உள்ள ரஷ்ய ராணுவம், உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நோக்கி படுவேகமாக முன்னேறி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வந்த சர்வதேச பொருளாதாரம், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. போர் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் அது சர்வதேச அளவில் பெரும் பாதிப்பைத் தரும் என்றே வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

பெட்ரோல் டீசல்
ரஷ்யாவின் இந்த தாக்குதலால் அதிகரித்துள்ள பதற்றமான சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே சர்வதேச அளவில் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும் விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலையை நிலையாக வைத்திருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பெட்ரோலிய துறை அமைச்சகம்
இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாகச் சர்வதேச எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் மாற்றம் மற்றும் சப்ளேவில் ஏற்படும் சிக்கல் குறித்து இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அதன் குடிமக்களுக்கு நிலையான விலையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யத் தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயாராக உள்ளது.

கையிருப்பு
சந்தை ஏற்ற இறக்கத்தைத் தணிக்கவும், கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவும், சேமிப்பில் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யை விடுவிக்கவும் அரசு தயாராக உள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை கடந்த ஆண்டு நவம்பர் 4(தீபாவளி அன்று) பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. அதன் பின்னர் சுமார் 113 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கும் நிலையில், இந்த போர் நடவடிக்கையால் மீண்டும் உயரலாம் என்று தகவல் வெளியான நிலையில், மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை
அரசியல் ரீதியாகவும், உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், அது முடிந்த உடன் கச்சா எண்ணெய் விலைகள் உயர்த்தப்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ரஷ்யா மீது உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்ததால், கச்சா எண்ணெய் விலை கடந்த 24ஆம் தேதி உச்சம் தொட்டது. இருப்பினும், நேற்றைய தினம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத் தகுந்த அளவுக்குச் சரிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

8 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறை
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் மீதான ரஷ்யா போரை ஆரம்பித்த போது, கடந்த 2014க்குப் பின் முதல் முறையாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை $100ஐ தாண்டியது. இது தான் நேற்றைய தினம் சற்றே குறைந்துள்ளது. இருப்பினும், போர் தொடரும்பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. அப்போது உள்ளூரிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்புகள் அதிகம், சென்னையில் இப்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications