"2024இல் காங். அழிந்துவிடும்!" பிரதமர் குறித்து வார்த்தையை விட்ட காங். தலைவர்! அமித் ஷா கடும் தாக்கு
நாகாலாந்தில் காங்கிரசை கடுமையாக அமித் ஷா சாடி பேசினார்.
டெல்லி: நாகாலாந்து மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு அமித் ஷா தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாகச் சாடி பேசினார்
நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் வரும் பிப்.27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மார்ச் 2இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அங்கு இரு மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணியே ஆட்சியில் இருக்கும் நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது. பல முக்கிய தலைவர்களும் அங்குப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்..

அமித் ஷா
இதற்கிடையே பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா, பாஜகவுக்காக நாகாலாந்தில் பிரசாரம் செய்தார். அங்கு பேசிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடினார். நாகாலாந்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசியி அமித் ஷா, "காங்கிரஸ் பிரதமர் குறித்துத் தொடர்ந்து இழிவான கருத்துக்களைப் பரப்ப முயன்று வருகிறது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரசை மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள். இந்த முறை காங்கிரஸ் நிச்சயம் அழிந்துவிடும்" என்றும் சாடினார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்
முன்னதாக அதானி விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, பிரதமரை நரேந்திர 'கௌதம் தாஸ்' மோடி என்று குறிப்பிட்டுச் சாடினார். மேலும் அவர், "நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் ஏன் பிரதமர் ஓடுகிறீர்? விசாரணைக்குக் குழுவைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? பி.வி.நரசிம்மராவ் மற்றும் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர 'கௌதம் தாஸுக்கு இதில் என்ன பிரச்சினை" என்று அவர் பேசியிருந்தார்.

கடும் பதிலடி
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் அமித் ஷா அப்படிப் பேசினார். அமித் ஷா மேலும் பேசுகையில், "பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் (பவன் கெரா) சொன்னது அவரது கருத்து இல்லை.. மாறாக இது தான் ராகுல் காந்தியின் இயல்பு.. 2019 தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி தவறான வார்த்தைகளால் விமர்சித்தார். அதன் விளைவாகக் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது

காணாமல் போகும்
ராகுல் காந்தி தலைவராக ஆனதில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் அந்தஸ்து கடுமையாகச் சரிந்து வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. 2024 தேர்தலுடன் காங்கிரஸ் கட்சி நிச்சயம் அழிந்துவிடும். அதன் பிறகு பைனாகுலரை வைத்துப் பார்த்தாலும் காங்கிரஸ் கண்ணுக்குத் தெரியாது" என்று சாடினார்.

வழக்குப்பதிவு
பிரதமர் மோடியின் தந்தை குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கேரா மீது லக்னோ போலீஸ் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.. நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் வரும் பிப்.27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே திரிபுராவில் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், அனைத்து மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 2இல் அறிவிக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications