51 ஆண்டுகளாக காங்கிரஸில் இருக்கிறேன்- என்னை அவமானப்படுத்திட்டீங்களே... குமுறும் சீனியர் ஆனந்த் சர்மா
டெல்லி: இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு தலைவர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா திடீரென ராஜினாமா செய்துள்ளார். தாம் காங்கிரஸில் 51 ஆண்டுகள் இருந்த போதும் சீனியர் என்ற முறையில் தம்மிடம் எதையுமே ஆலோசிக்காமல் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாக ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு வேண்டும்; கட்சித் தலைமையில் மாற்றம் தேவை என்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களின் நீண்டகால கோரிக்கை. இதனை வலியுறுத்தி கட்சித் தலைமைக்கு 23 சீனியர் தலைவர்கள் கடிதம் அனுப்பி இருந்தனர். குலாம் நபி ஆசாத், மணீஷ் திவாரி உள்ளிட்ட 23 பேர் இக்கடிதத்தை அனுப்பினர். காங்கிரஸ் தலைமைக்கு எதிரான இந்த கலகக் குரல் எழுப்பியவர்கள் ஜி 23 தலைவர்கள் என அழைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் கட்சியில் மறுசீரமைப்பு பணிகளை காங்கிரஸ் மேலிடம் முடுக்கிவிட்டிருந்தது. அப்போது குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களையும் காங்கிரஸ் மேலிடம் அழைத்து ஆலோசனை நடத்தியது. மேலும் இமாச்சல் பிரதேச வழிகாட்டுத் தலைவர் பதவியில் ஆனந்த் சர்மாவும் நியமிக்கப்பட்டார்.
ஆனால் காங்கிரஸில் மீண்டும் கலகக் குரல் வெடித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அண்மையில் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்து இப்பதவியை குலாம்நபி ஆசாத் ராஜினாமா செய்தார். இதே பாணியில் தற்போது இமாச்சல் பிரதேச வழிகாட்டுத் குழுத் தலைவர் பதவியில் இருந்து மற்றொரு மூத்த தலைவர் ஆனந்த் சர்மா ராஜினாமா செய்திருக்கிறார். இது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இமாச்சல பிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள ந்லையில் ஆனந்த் சர்மாவின் இம்முடிவால் காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காங். கில் தீவிர மோதல்.. இமாச்சல பிரதேச வழிகாட்டு குழு தலைவர் பதவியிலிருந்து ஆனந்த் சர்மா ராஜினாமா
ஆனந்த் சர்மா வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியில் 51 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்தேன். இமாச்சல பிரதேசத்தில் நான் சீனியர். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர். காங்கிரஸ் செயற்குழுவின் அரசியல் விவகாரங்களுக்கான குழுவிலும் இடம்பெற்றுள்ளேன். ஆனால் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்பான எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தையும் என்னை அழைப்பதே கிடையாது. இம்மாநிலத்துக்கு பூபேஷ் பாகல் மேலிடப் பார்வையாளராக வருகிறார். ஆனால் என்னை அழைக்கவே மறுக்கிறார்கள். இது என்னை அவமானப்படுத்துவதாகவே இருக்கிறது. எனக்கு என்னுடைய சுயமரியாதை மிக முக்கியமாகும். இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.