பட்ஜெட்டில் பெரிய பங்கு.. ஆந்திரா மற்றும் பீகார் எதிர்பார்ப்பு! கையை பிசையும் மத்திய அரசு
டெல்லி: விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் அதிக அளவிலான நிதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதனால் பாஜக அரசு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.
லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து மீண்டும் நிதியமைச்சராக நிர்மல சீதாராமன் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் வரும் ஜூலை 22ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசின் பரிந்துரைப்படி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22 முதல் ஆக., 12 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். 2024 - 25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 23ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும்" என கூறியுள்ளார். நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக பாஜகவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, பாஜக ஆட்சிக்கு தூணாக விளங்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி இந்த பட்ஜெட்டில் பெரிய நிதியை எதிர்பார்த்திருக்கின்றன. குறிப்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆளும் பீகார் மாநிலத்திற்கு இந்த பட்ஜெட்டில் ரூ.30,000 கோடி ஒதுக்கப்பட வேண்டும் என்று நிதஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த நிதிஷ் குமார் நிதி ஒதுக்கீடு தொடர்பாக வலியுறுத்தியுள்ளார். அதேபோல தெலுங்கு தேசம் கட்சி ஆளும் ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த சில ஆண்டுகளுக்கு ரூ.1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கோரிக்கைகள், மத்திய அரசு உணவுக்காக ஓராண்டுக்கு ஒதுக்கும் தொகையில் பாதிக்கும் மேலாகும்.
எனவே இந்த பட்ஜெட்டில் பாஜக கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இந்த இரண்டு மாநிலங்களின் கோரிக்கைகளை மத்திய அரசால் புறக்கணிக்க முடியாது.
சமீபத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 293 தொகுதிகளில் வென்றது. பாஜக தனியாக 239 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மை பெற 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் பாஜக இந்த முறை தனிப்பெரும்பான்மை பெறவில்லை.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 17 தொகுதிகளையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 என 33 தொகுதிகளை வென்று என்டிஏ கூட்டணி ஆட்சியமைக்க உதவி செய்திருக்கிறது. எனவேதான் இந்த இரண்டு கோரிக்கைகளையும் பாஜகவால் புறக்கணிக்க முடியாது. அப்படி புறக்கணித்தால் இக்கட்சிகள் தங்கள் ஆதரவை திரும்பப்பெற துணியும். அப்படி நடந்தால் பாஜக ஆட்சி கவிழும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications