டெல்லி ஷாகின் பாக்கில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு- ஜெய்ஶ்ரீராம் என முழக்கம்
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக்கில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கபில் என்ற இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய கபிலை போலீசார் மடக்கி பிடித்த போது ஜெய்ஶ்ரீராம் என அவர் முழக்கம் எழுப்பினார்.
டெல்லியில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றார். இதனையே பொதுமக்களை முழக்கமாக எழுப்பவும் அனுராக் தாக்கூர் கூறினார்,
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இதனால் தேர்தல் ஆணையம் அனுராக் தாக்கூர் தேர்தல் பிரசாரம் செய்ய 3 நாட்கள் தடையும் விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி ஜாமியா பல்கலைக் கழக வளாகத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம் பகத் கோபால் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH Delhi: Man who fired bullets in Shaheen Bagh has been taken away from the spot by police. The man claims to be Kapil Gujjar, a resident of Dallupura village (near Noida border). pic.twitter.com/6xHxREQOe1
— ANI (@ANI) February 1, 2020
இந்நிலையில் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் ஷாகின் பாக்கில் இன்று திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். கடந்த 3 நாட்களில் நிகழ்ந்துள்ள 2-வது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இது.
துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் நொய்டா பகுதியைச் சேர்ந்த கபில் என தெரியவந்துள்ளது. அவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அப்போது ஜெய்ஶ்ரீராம் என கபில் முழக்கம் எழுப்பினார். கபிலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.