ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு.. உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு!
டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்தார்.
கர்நாடக ஹைகோர்ட் ஹிஜாப்பிற்கு விதித்த தடை சரி என ஹேமந்த் குப்தா தீர்ப்பு வழங்கி உள்ளார். அதே சமயம் கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்தார் நீதிபதி சுஷாந்து துலியா. அதாவது ஹிஜாப் தடை செல்லாது என்று அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் வேறு அமர்வுக்கு வழக்கு மாற்றம் செய்யப்படும்.
கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15 ஆம் தேதி தீர்ப்பளித்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் நடைபெற்றது.

சீருடை அணிய வேண்டும்
கர்நாடக அரசு தரப்பிலும் இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுக்களை விசாரித்தது. கர்நாடக அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜாரகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். குறிப்பாக, ''உடுப்பியில் உள்ள கல்லூரி கடந்த 2013 ஆம் ஆண்டு மாணவிகள் அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்ற முடிவை எடுத்தது.

பரபரப்பு வாதங்கள்
இந்த சீருடை என்பதில் ஹிஜாப் வராது என்பதால் அனைத்து மாணவிகளும் சீருடை அணிந்தனர். மாணவிகளை சில அமைப்புகள் தூண்டி விடுகின்றன. ஹிஜாப் அணிய தடை விதித்தது நடுநிலையான உத்தரவே ஆகும்'' என்று வாதிட்டார். அதேபோல், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி பரபரப்பு வாதங்களை முன்வைத்தனர். 10 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்றது.

இன்று தீர்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிட்டாமல் கடந்த மாதம் 22 ஆம் தேதி ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். கர்நாடக ஹைகோர்ட் ஹிஜாப்பிற்கு விதித்த தடை சரி என நீதிபதி ஹேமந்த் குப்தா தீர்ப்பு விதித்தார். ஆனால் நீதிபதி சுஷாந்து துலியா கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்தார். இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்படுகிறது. வழக்கில் விசாரணை நடக்கும் வரை ஹிஜாப் தடை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications