வாவ்.. தமிழ்நாடு மாணவர்களை வியந்து பாராட்டிய ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் கூக்.. ஏன் தெரியுமா?
டெல்லி: ஐபோன் 13 மினியை பயன்படுத்தி அசத்தலான புகைப்படங்கள் எடுத்த தமிழகத்தை சேர்ந்த 40 மாணவர்களின் புகைப்படங்கள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியுள்ளார்.
உலகில் உள்ள முன்னணி செல்போன் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்நிறுவனம் புதிய ஐபோன்களை தயாரித்து விற்பனை செய்வதோடு, வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளையும் அவ்வப்போது நடத்துகிறது.

40 மாணவர்கள்
அந்த வகையில் ShotoniPhone என்ற தலைப்பில் புகைப்படம் எடுக்கும் போட்டியை ஆப்பிள் நிறுவனம் அடிக்கடி நடத்தும். இந்த போட்டியில் தமிழகத்தின் 40 பள்ளிகளின் மாணவர்கள் அசத்தலான போட்டோக்களை எடுத்துள்ளனர். இவர்கள் ஐபோன் 13 மினியை பயன்படுத்தி புகைப்படங்களை கிளிக்கி உள்ளனர்.இந்த படங்கள் கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம்குக் பாராட்டியுள்ளார்.

கண்காட்சியில் இடம்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், "இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த நாற்பது உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஐபோன் 13 மினியில் தங்கள் சமூகங்களை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இவர்களின் படங்கள் வரலாற்று சிறப்பு மிக்க சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சென்னை புகைப்பட பினாலே எனும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது'' என கூறியுள்ளார்.இந்த பதிவை ShotoniPhone எனும் ஹேஷ்டேக்கில் மாணவர்கள் எடுத்து 2 படங்களோடு பதிவிட்டிருந்தார். அதில் ஒரு படம் கடற்கரை மணலில் 2 சிறுமிகள் சிரிக்கும் வகையிலும், இன்னொரு படம், வானத்தை பிரதிபலிக்கும் நீரும் இடம்பெற்றிருந்தது.

ஏப்ரல் 17 வரை கண்காட்சி
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சென்னை போட்டோ பினாலே அறக்கட்டளை சார்பில் ‛கதைகளின் நிலம்' (A Land of Stories) என்ற பெயரில் கண்காட்சியில் இந்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சி ஏப்ரல் 17 வரை நடைபெற உள்ளது. இதில் தான் மாணவர்கள் எடுத்த படங்கள் இடம்பிடித்துள்ளன.

ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்
இதுபற்றி கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள அமைப்பு சார்பில் கூறும்போது "இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மாநிலத்தின் பாரம்பரியம், மாநிலம் முழுவதும் ஏராளமாக காணப்படுகிறது. இதை ஆவணப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள இளம் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கண்காட்சியானது தமிழகத்தையும் அதன் கதைகளையும் புகைப்படங்கள் மூலம் விளக்கும் தொகுப்பாகும். இது மக்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications