ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நாளை வரை நடத்த முடியாது.. உச்ச நீதிமன்றம் நாளை மீண்டும் விசாரணை
டெல்லி: அலகாபாத் உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையிடம் இது பற்றி விளக்கம் கேட்டுள்ள உச்ச நீதிமன்றம், விசாரணை நாளை தொடரும் என்று அறிவித்துள்ளது. எனவே ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நாளை வரை நடத்த முடியாது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டித்தான் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்த கோயிலை இடித்துதான் அந்த காலத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப் மசூதி கட்டியதாக கூறப்படுகிறது.

அந்த இடத்தில் கோயிலை அமைக்க வேண்டும் என்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வாரணாசி நீதிமன்றம் மசூதியின் வளாகச் சுவரில் அம்மன் அமைந்திருப்பதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அம்மனை வழிபட அனுமதித்தது. மேலும் மசூதிக்குள் கள ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து மசூதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில், அங்குள்ள ஒசுகானாவின் நடுவில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சிவலிங்கத்தின் பழமையை அறிய கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதனை செய்ய சிலர் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்கான அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற கார்பன் டேட்டிங் நடத்த அனுமதி கொடுத்தது.
இதனை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மன், கேவி விஸ்வநாதன், அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்ததது. அப்போது மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த கிபி 1,500-ம் ஆண்டில் இருந்து மசூதி இருக்கிறது. இப்போது சுமார் 30 பேர் மசூதியை தோண்டி ஆய்வு செய்கிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார். இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, "வாரணாசி நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே ஆய்வு செய்யப்படுகிறது. மசூதியை தோண்டவில்லை. அறிவியல்பூர்வமாக ரேடார் தொழில்நுட்பத்தில் ஆய்வு நடத்தப்படும் என்றார்.
எனினும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிவலிங்கத்தின் பழமையை அறியும் வகையில் தொல்லியல் துறை கார்பன் டேட்டிங் ஆய்வை ஜூலை 26-ம் தேதி வரை மசூதியில் நடத்தக்கூடாது. மசூதி நிர்வாகம் சார்பில் அலகபாத் உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) மேல்முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அலகாபாத் உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திய தொல்லியல் துறையிடம் இது பற்றி விளக்கம் கேட்டுள்ள உச்ச நீதிமன்றம், விசாரணை நாளை தொடரும் என்று அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்படி, அலகாபாத் உயர்நீதிமன்றமும் வழக்கை விசாரித்து வருகிறது. எனவே ஞானவாபி மசூதியில் நாளை வரையும் ஆய்வு நடத்த முடியாது. உச்ச நீதிமன்றம் நாளை அறிவிக்கும் உத்தரவை பொறுத்து ஆய்வு நடக்குமா இல்லையா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications