அரியலூர் மாணவி வழக்கு.. சிபிஐ தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி.. பெற்றோருக்கு நோட்டீஸ்!
டெல்லி: அரியலூர் மாணவி வழக்கில் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூர் பள்ளி ஒன்றில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவியின் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை ஹைகோர்ட் கிளை கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கை மதுரை ஹைகோர்ட் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.

விசாரணை
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம் திரிவேதி ஆகியோர் அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தமிழ்நாடு டிஜிபி சார்பாக வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜர் ஆனார். அதில், அந்த மாணவி கொடுத்த மரண வாக்குமூலம் உள்ளது.

தமிழ்நாடு அரசு வாதம்
மேஜிஸ்டிரேட்டிடம் கொடுத்த வாக்கு மூலம் உள்ளது. இதை தமிழ்நாடு போலீஸ் விசாரிக்கும் போது அதை ஹைகோர்ட் சிபிஐக்கு மாற்றி இருக்க கூடாது. எனவே இதை தமிழ்நாடு போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று வாதம் வைத்தார். அதேபோல் தமிழ்நாடு அரசு சார்பாக வழக்கறிஞர் எம்பி வில்சன் ஆஜர் ஆனார். மதுரை ஹைகோர்ட்டில் கிளை நீதிபதி தனது அதிகார எல்லைக்கு வெளியே தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

ஒரு நீதிபதி அமர்வு
ஒரு நீதிபதி அமர்வு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கூடாது. ஒரு அமர்வு நீதிபதி மாநில போலீசுக்கு உத்தரவு போட மட்டுமே அதிகாரம் உள்ளது. அதோடு மனுதாரர் தரப்பு இதில் சிபிசிஐடி விசாரணை கேட்டது. ஆனால் வாதம் வைக்கும் போது சிபிஐ விசாரணைக்கு கேட்டது. இதை தமிழ்நாடு அரசு தரப்பு எதிர்பார்க்கவில்லை. எனவே இதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதம் வைத்தார். இதையடுத்து நீதிபதிகள், தமிழ்நாடு அரசு வாதத்தை குறிப்பெடுத்துக் கொண்டோம்.

நோட்டீஸ்
ஆனால் இதில் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தட்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை தொடரலாம். சிபிஐ விசாரணையில் இப்போது தலையிட்டு அதை நிறுத்த விரும்பவில்லை. தமிழ்நாடு போலீஸ் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐக்கு அளிக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 வாரத்திற்குள் இதில் பதில் அளிக்க வேண்டும்.

வழக்கு பின்னணி
அரியலூர் மாணவி படித்த தஞ்சை பள்ளியில் ஹாஸ்டல் வார்டன் கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஹாஸ்டல் வளாகத்தை சுத்தம் செய்ய சொல்லி ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சகாய மேரி கைது செய்யப்பட்டுவிட்டார். இன்னொரு பக்கம் மாணவியை மத மாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியது. அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications