Pangong tso: கிழக்கு லடாக்கில்...இந்தியா ராணுவ தளபதி...எம்எம் நரவானே ஆய்வு!!
டெல்லி: இந்தியா சீனாவுக்கு இடையிலான சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் கிழக்கு லடாக்கில் பாங்கோங் டிசோ பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இங்கு இன்று காலை இந்திய ராணுவத் தளபதி எம்எம் நரவானே ஆய்வு மேற்கொண்டார்.
Recommended Video
கடந்த மே மாதத்தில் இருந்து கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது. இங்கு இருக்கும் பாங்கோங் டிசோ ஏரிப் பகுதியில் இந்தியாவுக்கு உள்பட்ட பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. சீனாவின் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தற்போது இருக்கும் நிலையை மாற்றுவதற்கு சீன ராணுவம் முயற்சித்தது. ஏற்கனவே சீனாவின் நடவடிக்கைகளை எல்லையில் கூர்ந்து கவனித்து வந்த இந்திய ராணுவம் தாமதிக்காமல் பதிலடி கொடுத்தது. அவர்கள் இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பே இந்திய ராணுவம் நுழைய வேண்டாம் என்று மெகா போன் மூலம் அறிவித்து தடுத்தது. மேலும் அங்கு சீன ராணுவம் நிறுவி இருந்த கண்காணிப்பு கேமராக்களை இந்திய ராணுவம் அடித்து நொறுக்கியது. இதை சீன ராணுவம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
பாங்கோங் டிசோ ஏரிப் பகுதியில் இருக்கும் தென்கரைப் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. இந்தப் பகுதியை ஆக்ரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. இங்கு இந்திய ராணுவ வீரர்கள் வலுவாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சுசூல் பகுதியில் இந்திய ராணுவம் கொடி அணிவகுப்பு மரியாதை செலுத்தியதாக செய்தி வெளியானது. கடந்த ஜூன் 15ஆம் தேதி கல்வான் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீன தரப்பில் 40 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது இருந்தே இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை லடாக் பகுதியில் இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவானே ஆய்வு மேற்கொண்டார். கடந்த மூன்று மாதங்களாக இந்திய ராணுவ வீரர்கள் இந்த இடத்தில் கடுமையான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கான வசதிகள் குறித்தும் இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் லே பகுதிக்கும் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நடந்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இவருக்கு ராணுவ கமாண்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications