எது, வடை 350 ரூபாயா! பச்சை தண்ணீர் 100 ரூபாயாம்.. தோசை விலை கேட்டால் ஆடி போவீங்க! இது இலங்கை நிலை
டெல்லி: இலங்கை நாட்டில் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் சூழலில், அங்குள்ள உணவகத்தின் பில் ஒன்று இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
அண்டை நாடான இலங்கையில் சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.
கொரோனாவுக்கு பின் சுற்றுலாத் துறை இன்னும் முழுமையாகப் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும் அப்படியே அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
சமஸ்கிருத உறுதிமொழி.. 'பலிகடா’ ஆக்கப்பட்ட டீன்? 2 மாதமாக சொல்லாதது யார் தப்பு? வெடிக்கும் விவகாரம்!
இலங்கை
இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உச்சத்தைத் தொட்டுள்ளது. காய்கறி, பழங்கள் மற்றும் பாலின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இலங்கை மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான உணவுப் பொருட்களை வாங்கக் கூட முடியாமல், அந்நாட்டு மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
பற்றாக்குறை
காய்கறி விலையேற்றம் மட்டுமின்றி, அங்கு எரிபொருள் பற்றாக்குறையும் உள்ளது. ஏற்கனவே, 1 பில்லியன் டாலர் கடனுதவியை இந்தியா அறிவித்தது. அதேபோல எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க 40 ஆயிரம் டன் டீசலையும் இந்தியா வழங்கியது. இருந்த போதிலும், இலங்கை நாட்டில் நிலைமை மேம்படவில்லை. இலங்கை நாட்டில் மின்வெட்டும் தலைவிரித்து ஆடுகிறது. பல பகுதிகளில் பல மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது.
உணவகத்தின் பில்
இப்படி காய்கறி தொடங்கி மின்சாரம் வரை அனைத்திற்கும் பற்றாக்குறை உள்ளதால், அனைத்து பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது. இதனிடையே இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் பில் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அந்த உணவகத்தில் இரவு உணவைச் சாப்பிட ஒருவரின் பில் படம் தான் அது. டின்னருக்கு மட்டும் சுமார் 4,750 இலங்கை ரூபாய் ஆகியுள்ளது. இலங்கையின் விலைவாசி எந்தளவுக்கு உச்சத்தில் உள்ளது என்பதை இது காட்டுவதாக உள்ளது.
வடை 350 ரூபாய்
இதில் வடை ஒன்று 350 இலங்கை ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக உள்ளது. அதேபோல ராவா தோசை ஒன்று 750 இலங்கை ரூபாய்க்கும், இட்லி ஒன்று 350 இலங்கை ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேபோல நான், பன்னீர் கிரேவி, விலையும் மிக அதிகமாகவே உள்ளது. அனைத்தையும் விட மினரல் வாட்டர் விலை 100 இலங்கை ரூபாயாகவும், காபியின் விலை 300 இலங்கை ரூபாயாகவும் உள்ளது. இந்த பில் தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மக்கள் போராட்டம்
இலங்கையில் இந்த நிலைக்கு ராஜபக்ச அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். ராஜபக்ச அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் போராட்டத்திலும் இறங்கி உள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் இரவு பகல் பார்க்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு புறம் தொடர்ந்து மோசமடையும் பொருளாதாரம் மறுபுறம் ஓயாமல் நடைபெறும் மக்கள் போராட்டம் காரணமாக அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.