"இப்போது வேண்டாம்.." 2ஆம் அலையில் யூஸ் செய்த இந்த மருந்தை தவிர்க்கலாம்..மத்திய அரசு வழிகாட்டுதல்கள்
டெல்லி: மத்திய அரசு கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் சில குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது.
அதிர்ச்சி.. அபுதாபி ஏர்போர்ட்டில் திடீர் வெடிகுண்டு தாக்குதல்.. 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி..!
இந்தியாவிலும் கிட்டதட்ட அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மோசமாகவே உள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள்
நாட்டில் வைரஸ் கேஸ்கள் அதிகரித்துள்ள போதிலும் ஐசியுகளில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகச் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேக்சின் போட்டுக் கொண்ட நபர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே ஏற்படுகிறது. வேக்சின் போட்டுக் கொள்ளாதவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே தீவிர பாதிப்பு ஏற்படுகிறது. இந்தச் சூழலில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் புதிய வழிகாட்டுதல் முறைகளை மத்திய அரசு இப்போது வெளியிட்டுள்ளது.
ஸ்டெராய்டுகள் வேண்டாம்
குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டெராய்டுகளை வழங்குவதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அரசு புதிய வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. விரைவாக அல்லது அதிகளவு ஸ்டெராய்டுகளை பயன்படுத்தும் போது இன்வேசிவ் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. லேசான, மிதமான மற்றும் கடுமையான பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு அளிக்கக் கூடிய மருந்துகளை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
என்ன காரணம்
முன்னதாக, 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் ஸ்டெராய்டுகள் தான் கொரோனா நோயாளிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதனால் பலருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பும் ஏற்பட்டது. இது தொடர்பாகக் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால், ஸ்டெராய்டுகள் போன்ற மருந்துகளின் அதிகப்படியான மற்றும் தவறான பயன்பாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லேசான நோயாளிகள்
இந்த புதிய வழிகாட்டுதலின்படி, மூச்சுத் திணறல் இல்லை என்றால் அதை லேசான கொரோனா பாதிப்பாக வகைப்படுத்தி, நோயாளிகளை வீட்டுத் தனிமையில் வைக்கலாம். அதிக காய்ச்சல், 5 நாட்களுக்கு மேல் தொடரும் இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ள கொரோனா நோயாளிகள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவரின் உடலில் ஆக்சிஜன் அளவு 90-93 சதவிகிதம் குறைந்து, மூச்சுத் திணறல் உள்ளவர்களை மிதமான பாதிப்பு உடையவர்களாகக் கருத வேண்டும். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். அத்தகைய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
தீவிர பாதிப்பு
மறுபுறம் குறைவான சுவாச விகிதம் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் உடல் ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் குறைந்தால் அதைக் கடுமையான கொரோனா பாதிப்பாகக் கருத வேண்டும். அவர்களுக்கு ஐசியு பிரிவில் கட்டாயம் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டும். அத்தகைய நோயாளிகளை NIV(Non-invasive ventilation) சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர் முடிவு செய்யலாம். அதேநேரம் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேலாக இருமல் நீடித்தால், நோயாளிகள் டிபி எனப்படும் காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
புதிய மருந்து
தீவிர கொரோனா பாதிப்பு கொண்ட சிறுநீரகம் அல்லது கல்லீரல் பாதிப்பு இல்லாத நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறது. அதேநேரம் வீட்டுத் தனிமையில் மருத்துவ உதவி தேவைப்படாத நோயாளிகள் ரெம்டெசிவிரை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தீவிர கொரோனா பாதிப்பால் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்ட உடன் முதல் 48 மணி நேரத்திற்குள் டோசிலிசுமாப் மருந்தை அளிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஸ்டெராய்டுகள் கொடுத்த பின்னரும் உடல்நிலை மேம்படாத நோயாளிகளுக்கும் டோசிலிசுமாப் அளிக்கலாம்.
Recommended Video
உயிரிழப்பு
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், கரோனரி தமனி நோய், நீரிழிவு, எச்ஐவி, காசநோய், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், உடல் பருமன் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் தான் கொரோனாவால் அதிகம் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற இணை நோய் உள்ளவர்கள் சரியான நேரத்தில் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது