டெல்லியில் குறையும் பாதிப்பு.. ஹாஸ்பிடலில் காலியாகும் படுக்கைகள்.. மற்ற மாநில நோயாளிகளுக்கு நம்பிக்கை
டெல்லி: மகிழ்ச்சி அளிக்கும் விதமாக டெல்லியில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைவதால் பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாகி வருகின்றன.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் தினசரி பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தது.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் இறந்தனர். கோர்ட்டே தலையிடும் அளவுக்கு நிலைமை விபரீதமாக இருந்தது. மத்திய அரசு டெல்லிக்கு சிறப்பு ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்தது.
குறையும் பாதிப்பு
இதனால் டெல்லி காமன்வெல்த் கிராமம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. ஐ.டி.பி.பி (இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை) மற்றும் டி.ஆர்.டி.ஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) ஆகிய மருத்துவமனைகள் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
குணமடைந்தோர் விகிதம் அதிகரிப்பு
பாஸிட்டிவ் விகிதமும் குறைந்து வருகிறது.நேற்று காலை நிலவரப்படி டெல்லியில் 4,482 புதிய பாதிப்புகள் பதிவாகின. ஏப்ரல் 5-ம் தேதியில் இருந்து இது தினசரி குறைந்த பாதிப்பாகும். 265 உயிரிழப்புகள் ஏற்பட்டன. பாஸிட்டிவ் விகிதம் 6.89 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் குணமடையும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் குணமடைந்தோர் விகிதம் 94.37 சதவீதமாக இருந்தது. நேற்று ஒரு நாள் மட்டும் 9,403 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
காலியாகும் படுக்கைகள்
இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் சாதாரண சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் காலியாகி வருகின்றன. செவ்வாய்க்கிழமை அன்று மொத்த படுக்கைகளில் 12,907 படுக்கைகள் காலியாக உள்ளன, 14,805 படுக்கைகள் நிரம்பி உள்ளன. ஐ.டி.பி.பி மற்றும் டி.ஆர்.டி.ஓ மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகள் காலியாகி இருக்கின்றன. ஐ.டி.பி.பி.யில் 229 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். 271 படுக்கைகள் காலியாக உள்ளன.
நம்பிக்கை கொடுக்கும்
''சில வாரங்களுக்கு முன்னதாக ஒவ்வொரு நாளும் 2,000 எஸ்.ஓ.எஸ் அழைப்புகள் வந்தன. ஆனால் இப்போது சராசரியாக 500-600 அழைப்புகள் மட்டுமே வருகின்றன. அதுவும் பெரும்பாலும் ஐ.சி.யூ படுக்கைகளுக்குதான் "என்று கொரோனா சிகிச்சை பராமரிப்பு வசதிக்கு பொறுப்பான ஐ.டி.பி.பி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். , டி.ஆர்.டி.ஓ.வில் 500 ஐ.சி.யு படுக்கைகளில் 269 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. யமுனா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் கொரோனா சிகிச்சை பராமரிப்பு மையத்தில் 800 படுக்கைகளில் 720-க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. டெல்லியில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மற்ற மாநில நோயாளிகளுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.